பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

க௭


கொட்டங்களையும் நடத்தி ஆண்டவராயிருந்துள்ளனர் என்பதுவும் நமக்குத் தெளிய விளங்குகின்றது!

[ களப்பிரர், பல்லவர் முதலிய அயன்மாக்களும் இப் பசும்புற் பைந்தமிழகத்தில் நன்கு மேய்ந்து பசியாறின. கடந்த நான்கு நூற்றாண்டுகளிடையில் போர்த்துக்கீசியர், தச்சுக்காரர். பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் முதலிய அயல் - ஆக்களும் இங்குப் புல்லும் வைக்கோலும் தழையும் தண்ணிரும் ஆரவுண்டு, தத்தம் சிறு நீரங்களையும் இம் மண்ணில் சிறக்கச் சொரிந்து கொண்டே தத்தம் கொழுமடிகளிற் சுரந்த பாலை மட்டும் தத்தம் சொந்த நாடுகளில் மட்டுமே பாய்ச்சிக் கொண்டு நின்றவாறிருந்து - பின் சென்ற அண்மைக்கால அவலக்கதைகளும் நமக்குப் பசிய நினைவுகளாகவே இன்றும் இருக்கின்றன! இன்றும் நம் பசுமை விளைவுகளை வடமாடுகளும் வடவாக்களும் விடாது மேய்ந்து வயிறார உண்டுகொண்டு நமக்கென நிறைய சாணத்திரளைகளாகவே சரித்துச் சாய்க்கின்றன! [ நாமோ - "சாணம் நல்லது தானே! " என்றவாறாக ஒருமை - ஒருமைப்பாடு பேசிப் பேசிப் பூசி மெழுகிக் கொண்டே நயந்திழிந்து கொண்டேபுரண்டு கிடக்கின்றோம்! . . . . . ஏமாற்று இதுவென நோகின்றோம் அல்லோம்! ஏய்ப்பு இதுவென வேகின்றோமா? . . . அதுவும் அல்லோம்! . . . ] அன்றிருந்து இன்றுவரை நம் பாடு - தொடர் பாடுதான்! நாம் இழிகதையோ, இன்னும் தொடர்கதைதான்!]

இவ் இழிகதையின் நனிமுது தொடக்கத்தை நன்கு உற்று உள்நோக்கிய உயராசான் - திருவள்ளுவர்பெருந்தகை, அக் காலவட்டத்தில் வதிந்து கோலோச்சிய மன்னர்களுக்குப் புகழ்பாடிகளாயிருந்துழன்ற மற்றைய புலமக்கள்போன்று - தாமும் உழலாதவராய், - அன்று ஆரியச் சூழ்வழுத்தத் தாக்கத்தால் உழன்று நெளிந்த நந்தமிழ்க் குமுகத்தை மீட்டு நிலைநிறுத்தி மீண்டும் செழிப்புக்குள்ளாக்க வேண்டும் என்னும் அருளுள்ளத்தவராய் மக்கட்பற்றோடு யாத்தளித்த மாபெரும் அறநூல் இத் “திருக்குறள்” என்னும் மறைநூல் ஆகும்.

இளங்கோவடிகள், சீத்தலைச்சாத்தனார் முதலிய பெரும்புலமை சான்ற ஆக்கத்தர்கள், இதனைப் பயன்கொண்டிருக்கும் சான்றிடங்களை உற்று உள்நோக்குகையில், இம் மறைநூலானது அக்கால வட்டத்திலேயே பெருஞ்செல்சொல் (செல்வாக்கு) பெற்றுச் சிறப்பிடம் பெற்றிருந்தமையும் நன்கு புலனாகின்றது! இதற்கும் பின்னீடாகத்