பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௩௭


வெளிப்படையாகவே வன்மையாகவே மறுத்து - தேவையானவிடத்துக் கண்டித்துக் கருத்துக்கூறும் போக்கு - முன்னுரையாசிரியர் முன்னி முனைந்து கண்ட நுட்பங்களை ஏற்றுத் தக்கவிடங்களில் அவற்றை நன்றியுணர்வொடு பதித்துச் செல்லும் போக்கு, காலவட்டத்தில் மீண்டும் மீண்டும் கூறப்பெற்ற உண்மையல்லாக் கருத்துகள் கல்வியுலகில் ஆழப் பதிவு கொண்டுள்ள இடங்களில் அவற்றுக்குப் பேராளமான எடுத்துக் காட்டுகளாலும் சான்றுகளாலும் ஏரணமுறைகொண்டு மறுப்புகள் சுட்டித் திருவள்ளுவர் தம் உள்ளத்தை நிலைநிறுத்திக்காட்டிச்செல்லும் அரிய முயற்சிப்போக்கு, திருவள்ளுவர்பெருமான் எந் நோக்கத்துக்கென எழுதிச்சென்றாரோ - அதனை உரிய இடங்களிலெல்லாம் நன்கு வலுப்பெற விளக்கிச்செல்லும் போக்கு - சொல்லுக்குரிய பொருள் அளவை, இடத்திற்கேற்பவும் யாத்த அக்காலத்திற்கேற்பவுமாக உட்செறித்துக்கொண்டு . இக்காலத்திற்குத் தெளிய விளங்கும்படியான சொல்லமைப்பில் அதனை நிறுத்திக் காட்டும் நுண்ணிய உத்திமுறை பயிலும் உரையுரைப்புப்போக்கு என்றனைய இவ்வுரைச் சுருக்கப் பதிப்புள் அடங்கியொளிறும் செம் போக்குகள் சிறப்பொடு ஈண்டுச் சுட்டத் தகுவனவாகும்!

திருவள்ளுவர் உள்ளத்தின் உட்கிடைகளை ஏரணமுறையிற் கூர்ந்தெண்ணித் தேற்றமாகவும் ஊற்றமாகவும் அவற்றை ஆங்காங்கும் அமைத்திருக்கும் மேம்பாடும் - இவ்வுரையாக்கத்தின் உச்சமேன்மையும், இதுகாறும் வெளிப்போந்துள்ள உரைகளொடு ஒப்பிட்டுக் கண்ட பின்னரே எவர்க்கும் விளங்கித் தோன்றுவதாகும்! அவ் வகையிற் பெரும்பான்மையளவிலாக ஒப்பிட்டுக் கண்ட உவகை மகிழ்ச்சியில் ஊக்கநிலையுற்றே இதனை உங்கள் முன் உரைக்கின்றேன்!

பெருங்கருத்தைச் சுருக்கி வார்த்த குறள்யாப்பின் உருத்தோற்றம் போன்றே நம் பாவலரேறு ஐயா அவர்களின் இவ் வுரைச் சுருக்கமும் நுணங்கிய நோக்கினர்க்கான திணுகிய வடிவமைப்பில் தீட்டப் பெற்றுள்ளது! சீரிய இச்செஞ்செயலின் பாரிய பெருமையை அவரின் நேரிய விளக்கவுரையிலேயே நாம் நிறைவாரக் காணவியலும்!

இன்று, இங்குச் சோறுமட்டும் பரிமாறப்பெற்றுள்ளது! சாறுங், குழம்பும், வகைவகை வறையும், கறியும் பொரியும், குய்ம் மணஞ் சான்ற கொழுஞ் சுவைத் தயிரும் அயிருங்காலம் அண்மி வருகின்றது! ஆம்! . அது அண்மையில்: . . அன்று, நம் ஆனைத் தீயன்ன அறிவுப்பசி ஆறும்! அதற்குரிய உரையாறும் முறையுற விரைவாரும்! அதுவரை இச் சுருக்குரை நம்முன் வீறும். . . நாம் முதற்கண் தேறும்படிக்கெனக்