பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/342

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

964 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
உருள்பெருந் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து"

என்ற திருக்குறளை எழுதுவான். பின் அந்தக் காகிதச் சுருளைக் கையில் எடுத்துக் கொண்டு சென்று அவள் அமர்ந்திருக்கும் பெஞ்சியின் டெஸ்க்கில் அவள் கண்கான வைத்து விட்டு வகுப்பிலிருந்து வெளியேறுவான். இதையெல்லாம் விடப் பெரிய வேடிக்கை என்னவென்றால் அவன் அந்தக் காகிதச் சுருளை டெஸ்க்கில் வைக்கும்போது, மாலதி பெஞ்சில் அமர்ந்துகொண்டிருந்தும் அவள் பக்கம் கண்களைத் திருப்பாமல் பாராமுகமாகச் சென்றுவிடுவான்.

அவன் தன் பெஞ்சை நோக்கி வரும்போது அவள் நெஞ்சு ‘படபட’ என்று அடித்துக்கொள்ளும், உதடு துடிக்கும். என்ன செய்கிறோம் என்ற உணர்வே இன்றி அவள் தன் இடத்தில் எழுந்து நின்றுகொள்வாள். அப்படியும் அவன் காகிதத்தை வைத்துவிட்டுக் கவனிக்காதவன் போலச் சென்றுவிடுவான்.

காலேஜ் வருடாந்திர விழா வந்தது. அதுகூட ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்று சொல்வது தவறு. காலேஜ் பிரின்ஸிபாலிலிருந்து ஜூனியர் இண்டரில் வந்து சேர்ந்திருக்கும் நேற்றைய புது மாணவன் வரை எல்லோரும் மூக்கிலே விரலை வைத்து ஆச்சரியமடையும் படியான சம்பவம் வேறு ஒன்று நடந்தது. சகுந்தலை - துஷ்யந்தன் நாடகத்திற்கு ஏற்பாடு செய்த ஸம்ஸ்கிருத புரொபஸர் மாலதியை சகுந்தலை வேடத்திற்குத் தேர்ந்தெடுத்தார்.துஷ்யந்தனாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த நிலையில் மாலதியே அவரிடம் சொல்லிய யோசனை அவரை ஒரு கணம் திகைத்துத் திக்குமுக்காடி வியக்குமாறு செய்து விட்டது.

நாராயணனைத் துஷ்யந்தனாக நடிக்கச் சொல்லி ஏற்பாடு செய்யும்படி மாலதி ஸம்ஸ்கிருத புரொபஸரிடம் கூறினாள். ‘நாராயணனின் முதல்தர விரோதியான அவள் வாயிலிருந்தா அந்த யோசனை பிறந்தது?’ என்று எண்ணி வியப்படைந்தார் ஸம்ஸ்கிருத புரொபஸர். ஆனால், நாராயணனைத் தனியே அழைத்து, ‘நாடகத்தில் துஷ்யந்தனாக நடிக்கச் சம்மதமா?’ என்று கேட்டபோது அவனும் அவரிடம் மறுக்கவில்லை. தன்னோடு சகுந்தலையாக நடிக்க இருப்பவள் கடந்த மூன்றரை வருடங்களாகத் தன்னுடனே பகைமை பாராட்டிவரும் அந்தக் குறும்புக்காரப் பெண் மாலதிதான் என்பதைப் புரொபஸர் வாயிலாகக் கேள்விப்பட்ட பின்பும் அவன் தயங்கவில்லை - ஒதுங்கித் தளரவில்லை - சம்மதத்திற்கு அறிகுறியாக மெளனத்தோடு ஒப்புக்கொண்டுவிட்டான்.அப்படி ஒப்புக்கொண்டபோது, ஒர் அழகான யுவதியுடன் நடிக்கும் சான்ஸ் கிடைத்ததற்காக மற்ற மாணவர்கள் இயற்கையாக அடையும் மகிழ்ச்சியும் ஆர்வமும் கூட அவனுக்கு ஏற்பட்டன என்று சொல்லி விடுவதற்கில்லை. தன் சம்மதத்தை மிக அமைதியும் மென்மையும் கூடிய முறையில் அவன் புரொபஸரிடம் வெளியிட்டான். ‘அவன் எந்த உணர்ச்சியோடு, எத்தகைய எண்ணங்களின் தூண்டுதலால் சம்மதித்திருக்க முடியும்?’ என்பது புரொபஸருடைய அனுமானத்திற்குக்கூட எட்டவில்லை.