பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/பகைமையின் எல்லை 🞸 965

சுபத்ரா, மாலதியைக் கிண்டல் செய்தாள். அவள் கையில் காலேஜ் வருடாந்திர விழாவின் புரோகிராம் இருந்தது. “ஏதேது? எதிரியோடு ‘ஹீரோயினாக’ நடிக்கத் துணிந்துவிட்டாற்போல் இருக்கிறதே! இதன் அந்தரங்கம் என்னடி அம்மா? எனக்குத்தான் கொஞ்சம் சொல்லேன்! ‘பகையாளி குடியை உறவாடிக் கெடுக்கவேண்டும்’ என்ற சித்தாந்தமாக இருக்குமோடி?”

சக மாணவர்கள் நாராயணனைக் கண்டபோது எல்லாம் அவன் காதில் விழும் படியாக, “யோகம் என்றாலும் இப்படிப்பட்ட யோகம் அடிக்கக் கொடுத்துவைக்க வேண்டுமடா! நேற்றுவரை இந்தப் பயலைக் கரித்துக் கொண்டிருந்தாள் அவள் நாள் தவறாமல் வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தாள்! இன்றைக்கு என்னடா என்றால், ‘நான்தான் சகுந்தலை, நீதான் துஷ்யந்தன்’ என்கிறாள்! இந்தக் காலத்திலே பெண்கள் மனசுகூட பிளாஸ்டிக் ரப்பராகப் போய்விட்டது அப்பா! எதையுமே நம்பி ஒரு தீர்மானத்திற்கு வரமுடிவதில்லை” - என்று பாதி வேடிக்கையாகவும், பாதி வினையாகவும் பேசிக் கொண்டனர். நாராயணன் எப்போதும் போல அவர்களது இந்தப் பேச்சையும் லட்சியம் செய்யவில்லை. அவன் தன் போக்கில் இருந்துவந்தான்.

கோடை விடுமுறைக்குப் பின் காலேஜ் திறந்தபோது, நாராயணனும் மாலதியும் ஜோடியாக பிரின்ஸிபாலின் அறைக்குள் நுழைந்தனர். சூரியனும் சந்திரனும் ஒரே நேரத்தில் ஒன்றாக வந்த காட்சியைக் கண்டவர்போல மலைத்தார் பிரின்ஸிபால்!

மாலதி புன்னகை செய்துகொண்டே மரியாதையாக அவரிடம் ஒரு கவரை நீட்டினாள். அதே சமயத்தில் நாராயணனும் ஒரு கவரை நீட்டினான். பிரின்ஸிபால் இரண்டையும் ஏககாலத்தில் வாங்கிக்கொண்டார். கவர்களை ஆவலோடு பிரித்தார்.

இரண்டு கவர்களிலும் ஒரேவிதமான மஞ்சள் நிறக் கலியானப் பத்திரிகைகள் இருந்தன. இருவரும் அவருக்கு மாணவ முறை உடையவர்கள். ஆகையால் தனித்தனியே உரிமை பாராட்டிப் பத்திரிகை கொடுத்திருந்தனர்.

பிரின்ஸிபால் ஆச்சரியக் கடலில் ஆழ்ந்தார். நமட்டுச் சிரிப்பு அவர் இதழ்களில் தவழ்ந்தது. “நாடகத்தில்தான் ஏதோ பகையை மறந்து நடித்தீர்கள் என்று எண்ணி யிருந்தேன். வாழ்க்கையில் சகுந்தலையும் துஷ்யந்தனுமாக நடிப்பதற்காகத்தான் இங்கே காலேஜ் ‘அனிவர்ஸ்ரி’யில் ஒத்திகை நடத்தினர்கள் போல இருக்கிறது! மிஸ் மாலதி! உங்களுக்குத் தனியாக ஒரு வார்த்தை-காலேஜில்தான் மிஸ்டர் நாராயணனைப் படாத பாடுபடுத்தி ஆட்டி வைத்தீர்கள். நாள் தவறினாலும் உங்கள் ‘கம்ப்ளெயிண்ட்’ இங்கே எனக்கு வரத் தவறாது! போகிறது. நிஜ வாழ்க்கையிலாவது ஒற்றுமையாக இருங்கள்! இரண்டு பகைவர்கள் வாழ்க்கையில் தம்பதிகளாக வருவது குறித்து எனக்குப் பரம சந்தோஷம்!”- பிரின்ஸிபால் சிரிப்புக்கிடையில் இப்படிக் கூறிப் பேச்சை நிறுத்தினார்.

“ஸார்! கல்யாணம் இங்கே சிதம்பரத்தில்தான் நடக்கிறது! உங்கள் வரவை அவசியம் எதிர்பார்ப்போம். வந்து ஆசீர்வாதம் செய்யவேண்டும்.” நாராயணன் கூறினான்.