பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

966 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

மாலதி தலையைக் குனிந்துகொண்டாள்.கால் கட்டைவிரல்தரையைத் தேய்த்தது. முகத்திலே கன்னங்கள் கன்றிச் சிவந்தன. இருவரும் பிரின்ஸிபாலிடம் விடைபெற்றுத் கொண்டு வெளியேறினர்.

காலேஜில் புதிதாக அட்மிஷனுக்கு வந்து காத்துக் கொண்டிருந்த மாணவர்களும், ஏற்கனவே அவர்களுக்கு அறிமுகமான பழைய மாணவர்களும், நாராயணன் - மாலதி இருவரும் ஜோடியாகச் செல்வதைக் குறும்புத்தனம் ஒளிரும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்தனர்.

முகூர்த்தம் முடிந்ததும், தன் பெயருக்கு வந்திருந்த சுபத்ராவின் அன்பளிப்புப் பார்சலையும் கடிதத்தையும் பிரித்தாள் மாலதி, ‘அன்புத் தோழி மாலதி நாராயணனுக்கு, நீ நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, உங்களின் இந்த ஐக்கியம் நான் அன்றே எதிர்பார்த்ததுதான். எல்லா மாறுபட்ட உணர்ச்சிகளும் தத்தம் எல்லைகளை மிக மிக நெருக்கமாகவே அமைத்துக்கொண்டிருக்கின்றன. மண்ணின் எல்லை கடல். கடலின் எல்லை மண். வானத்தின் எல்லை பூமி, பூமியின் எல்லை வானம். பகையின் மறுகோடியில் எல்லையாக இருப்பது அன்பும் நட்புமே. அசூயையின் எல்லை விருப்பம்தான்.உலகமே உருண்டை வடிவாகத்தான் இருக்கிறது. எங்கே புறப்பட்டாலும், எல்லை சுற்றி வளைத்து நெருக்கமாகவே வந்து சேருகிறது. உங்கள் தாம்பத்தியம் நலமுற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


- உன் தோழி சுபத்ரா”


உள்ளே நுழைந்த நாராயணனிடம் சிரித்துக்கொண்டே அந்தக் கடிதத்தை நீட்டினாள் மாலதி.


(1978-க்கு முன்)