பக்கம்:பிள்ளைக்கலி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 மறுநாள் மணிவிழா!

  பரிமேலழகர் மனைவி அஞ்சுகம் தரையில் நடக்காமல் ஆலாகப் பறந்து கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே இரட்டை நாடி உடல். கணவனுக்குக் கிடைக்கும் சீரும் சிறப்பும் அந்த அம்மாளைப் பூரிக்கச் செய்து, அவர்களை மேலும் பருமனாக்கியது. பரிமேலழகரைத் திருமணம் செய்து கொண்டபோது அவர்களுக்கு வயது பத்து. அதன் பிறகு அவருடன் 'கணவனே கடவுள்' என்ற ஒரே குருட்டு மனப்பான்மையுடன் வாழ்ந்து வந்த இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் ஒரு நாளாவது அவர் ஒரு சிறந்த அறிவாளி என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டதில்லை.
  'கடைக்குச் சென்று விலையை விசாரித்து ஓர் அணா உப்பும், கால் வீசை மிளகாயும், அரையணாவுக்கு மிளகும், அஞ்சு பலம் தக்காளியும், அதற்குக் கொசிறாகக் கொஞ்சம் இஞ்சியும் வாங்கி வரத் துப்பு இல்லாதவரைப் போய்...' இதுதான் அந்த அம்மாளின் வாதம்.

  'பக்கம் பக்கமாக எத்தனையோ புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்றால், அது ஒன்றும் பிரமாதமான காரியம் இல்லை. எழுதத் தெரிந்தால் நான் கூடத்தான் எவ்வளவோ எழுதி எழுதிக் குவிப்பேன். புத்தகம் போட்டார் என்றால், இவரா போட்டார்? இவர் ஏதோ பேப்பரில் கிறுக்கிக்கொடுத்ததை, ஆர்டிஸ்டு அழகாகப் படம் போட்டுக் கொடுக்க பிரஸ்காரன் அச்சுக்குக் கொடுத்தான். அத்தனை புத்தகத்தையும் 'மடமட' வென்று மிஷின் அடித்துத் தள்ளியது' என்பார்கள்.
  அப்படிப்பட்டவர்கள், சில நாள்களாக தின இதழ்களைப் பிரித்ததும் முதல் பக்கத்திலேயே தமது புகைப் படத்தையும் தமது கணவருடைய புகைப் படத்தையும் மணிவிழா நிகழ்ச்சிக் குறிப்பையும் பார்க்கும் போதெல்லாம் 'கணவர் சிறந்த மேதையே...... இல்லாவிட்டால் இவ்வளவு கோலாகலமாக எல்லாம் செய்வார்களா?’ என்று எண்ணினார்கள்.
  'நம் ஐயனாரப்பன் அருள்தான் இவ்வளவு சிறப்புக்கும் காரணம்' என்று மூச்சுக்கு முப்பது தடவை தங்கள் குலதெய்வத்தை நன்றியுணர்ச்சியுடன் நினைத்துக் கொண்டார்கள்.
  பரிமேலழகருக்குத் தமிழ்ப் பற்றுதல் அதிகம். ஐயனாரப்பன் என்ற தமது பெயரை, 'பரிமேலழகராக' மாற்றிக் கொண்டார். அதைப் போலவே, தம் மனைவியின் பெயரையும், பூங்குழலி...
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/155&oldid=1407874" இலிருந்து மீள்விக்கப்பட்டது