பக்கம்:புகழ்மாலை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

47


இறவாத புகழ் பெற்ற இக்பால்

பஞ்சாபி லேபிறந்த முஸ்லிம்; பேசும்
       பலமொழிகள் கற்றுணர்ந்த கவிஞன், மக்கள்
நெஞ்சத்திலே உலவும் ஆசை போன்றோன்,
       நீடுபுகழ், நாட்டுக்குத் தேடி வைத்தோன்.
அஞ்சாத போராற்றல் பெற்ற சிங்கம்.
      அறிஞர்க்கெல்லாம் அறிஞன், அழகன்; ஞானி,
சஞ்சீவி; சாகாத மருந்து; இக்பால்!
       சரித்திரத்தை வளர்த்தஒரு புதிய ஏடு

ஆராய்ச்சிக் காவியங்கள் எழுதி வைத்து
       அத்தமித்துப் போய்விட்டப் பிறைவிளக்கு
ஒராயிரம் ஆண்டு நகர்ந்திட்டாலும்,
        உலகுக்குச் செங்கதிர்போல் தேவைப் பட்டோன்.
நேராத துயரங்கள் நேரும் போதும்,
       நீரலைபோல் அசையாது, ஞானியாகும்
பேராற்றல் பெற்றிருந்த பெரியோன் கல்விப்
       பேச்சுக்கோர் மூச்சைப்போல் இருந்து சென்றோன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/49&oldid=1491455" இலிருந்து மீள்விக்கப்பட்டது