பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

புறநானூற்றுச் சிறு கதைகள்


அரச மரபிலே பிறந்த வேறொருவனைப் பார்த்துப் புலவர் இதே கேள்வியைக் கேட்டிருந்தாரேயானால் அவர் தலை அந்தக் கணமே தரையில் உருண்டிருக்கும்! ஆனால் மாவளத்தான் அவருடைய அநாகரிகமான, பண்பில்லாத இந்த வினாவைக் கேட்டும் சீறி எழாமல், நாணித் தலைகுனிந்து வீற்றிருந்தான். காரணம்...? ஆத்திரத்தால் தான் செய்துவிட்ட காரியம் புலவரின் கேள்வியைவிட அநாகரிகமானது என்பதை, அவர் மேல் சொக்கட்டான் காயை விட்டெறிந்த மறுகணமே அவன் தானாகவே உணர்ந்து கொண்டான்.அவன் நாணி வீற்றிருந்ததும் தன் பிழைக்காகவே ஆகும். “அடே! நீ குலத்தில் பிறந்தவன் தானே?” என்று அவ்வளவு கடிய முறையில் கேட்டும்கூட மாவளத்தான் பதில் பேசாமல் நாணித் தலைகுனிந்து வீற்றிருந்தது புலவர் தாமப்பல் கண்ணனாருக்கு வியப்பை அளித்தது! அவர் அவனையே உற்று நோக்கினார்.

அப்படிப் பார்த்த, அப்போதுதான் அவரும் ஆற அமரச் சிந்தித்தார். இவ்வளவும் நடப்பதற்குக் காரணமாக இருந்த முதற் குற்றம் நான் அவனுடைய சொக்கட்டான் காயைத் திருடியதுதானே? ஆத்திரத்தில் அவன்தான் எறிந்துவிட்டான் என்றால் அதற்காக நான் இவ்வளவு நாகரிகமற்ற ஒரு வார்த்தையை வீசியிருக்க வேண்டாம். நானே குற்றத்தைச் செய்து விட்டு அவனைப் போய்த் தூற்றுவது எவ்வளவு அறியாமை? என்னுடைய அறியாமையால் அவன் தலைகுனிய நேர்ந்து விட்டதே இவ்வாறு சிந்தித்துத் தம்மை உணர்ந்த தாமப்பல் கண்ணனார் மாவளத்தானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள விரும்பினார். இந்த எண்ணம் தோன்றியதும் அவர் தலை குனிந்திருந்த அவனருகில் சென்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டு உருக்கமான குரலில் கூறினார்.

“வளவா! என்னை மன்னித்துவிடு. உன்னை நோக்கி ஆத்திரத்தில் விடுத்த பண்பற்ற அந்தச் சொல்லை நீ மனத்திற் கொள்ளக்கூடாது. குற்றத்தை முதலில் செய்தவன் நானாக இருக்கவும் நீயே குற்றம் செய்தவன் போல நாணமடைகிறாய்.இது அல்லவா உயர் குடியிற் பிறந்தார் பண்பு! உன்னுடைய இந்த உயரிய பண்பு காவிரி மணலைக் காட்டிலும் பன்னாள் வாழ்க!”