பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

புறநானூற்றுச் சிறு கதைகள்


“நீங்களெல்லாம் யார்?”

“செழிப்பாக இருந்த பாணர் குடும்பமுங்க. இப்போ ஆதரிக்க ஒருவருமில்லாமல் சோத்துக்குப்பிச்சை எடுக்கிறோம்!”

“ஐயோ பாவம்!”

“ஏதோ! நீங்க மனசு வச்சா இன்னிக்காவது இந்தக் குழந்தைகள் வயிறு குளிறும்...”

அவன் ஒரு விநாடி தயங்கினான். நின்று யோசித்தான். “ஐயா! நீங்க ரொம்ப நல்லவங்களைப் போலத் தோன்றிங்க உங்களுக்கு நிறைய புண்ணியம் உண்டு. ஏழை முகம் பார்த்து உதவுங்க”

“இந்தாரும் பாணரே இதை முன்தானையில் வாங்கிக் கொள்ளும்.”

பாணர் ஆவலோடு முன்தானையை விரித்தார். தனக்குக் கூலியாகக் கிடைத்த அவ்வளவு வரகையும் அந்த ஏழைப் பாணனின் முன்தானையில் உதறிவிட்டு மேலே நடந்தான் அவன். மனத்தில் பட்டதைச் செய்தான். அவன் வள்ளலில்லை, கொடையாளி இல்லை, கருணை இருந்தது. கையிலிருந்ததையும் மனத்திலிருந்த கருணையையும் சேர்த்துக் கொடுத்துவிட்டு நடந்தான்.

ஏழைக்குப் பணக்காரனின் உள்ளமும், பணக்காரனுக்கு ஏழையின் உள்ளமும் இருந்தால் என்ன செய்வது? அவன் ஏழைதான்! ஆனால் அவனுடைய உள்ளம் பணக்கார உள்ளமாக இருந்து தொலைத்ததே. அதற்கென்ன செய்யலாம்? உலகத்தில் இப்படி ஒரு முரண் இயற்கையாக விழுந்து கிடக்கிறதே?

வெறுங்கையோடு வீட்டில் போய் நின்றான். “வரகு கொண்டு வரவில்ல்ையா? நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று நம்பி உலையைப் போட்டு வைத்திருக்கிறேன்? அவள் ஏமாற்றத்தோடு கேட்டாள்.