பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

147


அதியமான் தகடூரை அடைந்து அரண்மனைக்குள் நுழைந்தபோது தமிழ் மூதாட்டி ஒளவையாரும் அங்கே தன் புதல்வனைக் காண்பதற்காக ஏற்கனவே வந்திருப்பதை அறிந்தான். ஒளவையாரும் அவன் வரப்போவதைமுன்பே அறிந்து எதிர் கொண்டழைத்துக் கொண்டு சென்றார். இருவரும் உரையாடிக் கொண்டே அரண்மனையில் அந்தப்புரப்பகுதியை அடைந்தனர்.

அந்தப்புரத்தில் பணிப்பெண்கள் அதியமான் குழந்தையைக் கண்டு செல்ல வரப்போவதை அறிந்து மலர்களால் நன்கு அலங்கரிக்கப் பெற்ற சிறுதொட்டில் ஒன்றிலே குழந்தையை எடுத்துவிட்டிருந்தார்கள். சின்னஞ்சிறிய தங்கப்பதுமை போலிருந்த குழந்தை கைகால்களை உதைத்து அழுது கொண்டிருந்தது. அதியமான் மெய்யில் கவசமும் கையில் வேலுமாகப் போர்க்கோலத்துடனேயே தொட்டிலருகிற் சென்று குழந்தையைக் கண்டான். அவனது முகத்திலும் கைகால்களிலும் மார்பிலேயும் போரில் பட்டிருந்த புண்கள் தெரிந்தன. ஆனால், அந்த நிலையிலேயும் புதல்வனைக் கண்ட மகிழ்ச்சி அவன் முகத்தில் நிலவியது. குழந்தையின் பட்டுமேனியையும் பிஞ்சுக் கைகால்களையும் மலர்ந்த முகத்தோடு சிவந்த தன் கண்களில் ஆவல் திகழப் பார்த்தான் அவன். ஒளவையாரும் பக்கத்திலே நின்றுகொண்டிருந்தார். குழந்தை முன்போலவே கைகால்கள்ை ஆட்டி உதைத்துஅழுது கொண்டுதான் இருந்தது. கீச்சுக் குரலில் கத்தி விறைத்தது: “அது ஏன் அப்படி அழுது விறைக்கிறது:” என்று அதியமானுக்குப் புரியவில்லை. அவன் தன்க்குப் புரியாத அந்தச் சந்தேகத்தை நிவர்த்திசெய்துகொள்ளும் நோக்கத்துடன் ஒளவையாரைப் பார்த்தான்.

சரியாக அதே சமயத்தில் ஒளவையாரும் அவனைப் பார்த்துச்சிரித்துக்கொண்டே கேட்டார், “அதியா குழந்தை ஏன் கால்களை உதைத்துக்கொண்டு அழுகிறது என்பதை நீ தெரிந்து கொண்டாயா?”

“இல்லையே! அது எனக்குத் தெரியாததனால்தான் நீங்களே சொல்லிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.”