பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

13


இதற்குள் வெளியே இருந்த சிறைக் காவலர்களில் இளகிய உள்ளம் படைத்த ஒருவன் மற்றொருவனிடம் கூறினான்; “ஐயோ பாவம் மனிதர் தவித்த வாய்க்குத் தண்ணிரின்றித் திண்டாடுகிறார். நீங்களெல்லாம் நெருப்பை வாரி வீசுவதுபோலக் கொடுஞ் சொற்களைக் கூறுகிறீர்களே! இதுவா, மனிதப் பண்பு? நீ கொஞ்சம் பார்த்துக் கொள் அப்பா. நான் போய்த் தண்ணிர் கொண்டு வருகிறேன்.” இரண்டாவது காவலன், “சரி! உன் விருப்பத்தை நான் ஏன் கெடுக்கிறேன்? போய் அவனுக்குத் தண்ணிர் கொண்டு வந்து கொடுத்துப் புண்ணியத்தைச் சம்பாதித்துக் கொள்” என்றான். முதற் காவலன் புறப்பட்டான்.

இரக்க குணமுள்ள அந்தக் காவலன் ஒரு குவளை நிறையக் குளிர்ந்த நீரைக் கொணர்ந்தான். சிறைக் கதவைத் திறந்து இரும்பொறையினருகில் சென்று குவளையை நீட்டினான். இரும்பொறை உயிர் வேதனையோடு மகாபயங்கரமாக விக்கிக் கொண்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்திற்குள் அவன் தண்ணிரைக் குடிக்காமலிருப்பானாயின் உயிரே போனாலும் போய்விடும். அவ்வளவு கோரமான நீர் வேட்கை.

ஆனால், அந்த நிலையிலும்கூடக் காவலன் நீட்டிய தண்ணிர்க் குவளையை அவன் வாங்கிக்கொள்ள மறுத்து விட்டான்.

“காவலனே! உன் அன்புக்கு நன்றி. உயிரைவிடமானத்தையே பெரிதாக எண்ணுகிறேன் நான்.நீ கொடுக்கும் இந்த நீரை வாங்கிப் பருகிவிட்டால் இப்போது இந்த மரணவஸ்தையிலிருந்து என் உயிர் பிழைத்துவிடும். ஆனால், என்றைக்காவது ஒருநாள் எப்படியும்போகப் போகிற இந்த உயிர்மானத்தைக் காப்பதற்காக இன்றைக்கே போய்விடுவதினால் என்ன குறைந்துவிடப் போகிறது? கேவலம், பிச்சைக்காரன் பிச்சை கேட்பதுபோல, மானமில்லாமல் உங்களிடம் தண்ணிர் கேட்டுவிட்டு நான் பட்ட அவமானம் போதும்...”

“அரசே! தாங்கள் மிகவும் ஆபத்தான நிலையிலிருக்கிறீர்கள். இப்போது நீர் பருகாவிட்டால்...”