பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

177


பேகன் அந்த மயிலுக்கு அருகில் சென்றான். தன் உடலைப் போர்த்திக் கொண்டிருந்த பட்டாடையை எடுத்தான். தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்த மயிலின்மேல் அப்படியே அதை போர்த்தினான்.

மேலே போர்வை விழுந்ததனால் அஞ்சிக் கூசிய மயில் தோகையை ஒடுக்கிக் கொண்டு ஆடுவதை நிறுத்திவிட்டது.தான் போர்வையைப் போர்த்தியதால்தான் மயிலின் குளிர் நடுக்கம் நின்றுவிட்டது என்றெண்ணிக் கொண்டான் அவன். அந்த அழகிய பிராணிக்கு உதவி செய்து, அதன் துன்பத்தைத் தணிக்க முடிந்த பெருமிதம், திருப்தி, மகிழ்ச்சி எல்லாம் அவன் அகத்திலும் முகத்திலும் நிறைந்தன.தன் இன்பத்தை மற்றவர்களுக்கு அளித்து, மற்றவர்களுடைய துன்பத்தைத் தான் பெற்றுக் கொள்வதுதானே தியாகம்? அந்தத் தியாகத்தின் இன்பம் அப்போது அவனுக்குக் கிடைத்திருந்தது.

போர்வையற்ற அவன் உடலில் குளிர் ஊசியால் குத்துவது போல உறைத்தது. “அடடா! சற்று நேரத்திற்குமுன் இந்த மயிலுக்கும் இப்படித்தானே குளிர் உறைத்திருக்கும்? ஐயோ, பாவம்! அதனால்தான் அது அப்படிவெடவெட'வென்று நடுங்கி ஆடிக் கொண்டிருந்தது. நல்லவேளையாக அதன் துன்பத்தைத் தீர்த்துவிட்டோம். நாமாவது இந்தக் குளிரைப் பொறுத்துக் கொண்டே நடந்து போய்விடலாம்!”

நிறைந்த மனத்தோடும் திறந்த உடம்போடும் வந்த வழியே திரும்பி நடந்தான் அந்த வள்ளல். திடீரென்று பின்புறம் யாரோ கலகலவென்று சிரிக்கும் ஒலி கேட்டுத் திரும்பினான். பரணர் அருவிக்கரையிலுள்ள ஒரு மரத்தின் பின்புறமிருந்து வெளியே வந்தார்.பேகன் வியப்போடு அவரைப்பார்த்தான்.அவர் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துக் கொண்டே வந்தார். பேகனுக்கு அதன் காரணம் விளங்கவில்லை.

“என்ன பரணரே! நீங்கள் இங்கே எப்பொழுது வந்தீர்கள்? எதற்காக இப்படி அடக்கமுடியாமல் சிரிக்கிறீர்கள்? எனக்கு: ஒன்றும் புரியவில்லை?”