பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

புறநானூற்றுச் சிறு கதைகள்


அச்சு நாகரிகமும், பேச்சு மேடைகளும், தத்துவத்தை விருப்பப் பாடமாகப் போதிக்கும் பல்கலைக் கழகங்களும் இல்லாத ஒரு காலத்தில் வாழ்ந்த புலவர் இந்த நக்கீரர். ஆனால் இவர் கண்ட உண்மையோ, மேற்கண்ட எல்லா வசதிகளும் நிறைந்திருக்க வாழும் நம் காலத்திலும் பழைமையானதாக எண்ணமுடியாத புதுமையுடன் இருக்கின்றது. இது விந்தை அன்று. தத்துவத்தின் சரித்திரம் என்றுமே இப்படித்தான். ‘தத்துவம்’ என்பது ஒரு பொன்மலர். அது வாடாது மணக்கவும் மணக்காது. ஆனால் தன் நிலையில் தானாக என்றும் இருந்து கொண்டே இருக்கும். இல்லையென்றால் காரல்மார்க்ஸ் தொடங்கி, காந்தியடிகள்வரை வாழ்வின் அடிப்படையைப்பற்றி என்ன கூறியிருக்கிறார்களோ, அவைகளை மாறுபடுத்தாமல் நக்கீரரின் பழங்கருத்தும் விளங்கிட முடியுமா? அப்படித்தான் எந்த ஒரு பெரிய தத்துவத்தை நக்கீரர் கண்டுபிடித்துவிட்டார்? ஆம்! உண்மையிலேயே வாழ்வின் மிகப் பெரிய தத்துவம்தான் அது!

கடைச் சங்கத்திலுள்ள புலவர் நாற்பத் தெண்பதின்மர்க்கும் தலைவர் அவர். ‘நக்கீரர்’ என்ற பெயரைக் கேட்டாலே போவிப் புலமையைக் கருவியாகக் கொண்டு வாழுபவர்கள் நடுங்குவார்கள். சங்கத்தை வளர்த்துவரும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியினிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு அவருடைய புலமையாலும் கலைத் திறனாலும் அவனிடம் அத்தகைய செல்வாக்கைப் பெற்றிருந்தார் அவர்.

ஒரு சமயம் சங்கப் புலவர்கள் யாவரும் கூடியிருந்த அவையில் பாண்டிய மன்னன் புலவர்களை நோக்கி ஒரு ஐயத்தை வெளியிட்டான். “குபேரன் முதல் கோவணாண்டிவரை வாழ்க்கைக் கயிற்றில் ஒரே நூலில் கோக்கப்பட்டிருந்தும் அவர்களுக்குள் தகுதியினால் வேறுபாடு ஏன்? அடிப்படையில் ஒற்றுமை என்பதே கிடையாதோ?”

பாண்டியனுடைய இந்த வினாவே அர்த்தமற்ற தாகப்பட்டது, புலவர்களில் அநேகருக்கு ‘என்ன நோக்கத்தோடு