பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

புறநானூற்றுச் சிறு கதைகள்


பொதியமலைக் காட்டுக்கு ஒரு நாள் உம்மோடு நான் வந்தால் அது விளங்கிவிடுமா?"

“உடலுக்கு மூலிகை மட்டும் மலைகளிலே கிடைக்கவில்லை அரசே! அகண்டாகாரமான இந்தப் பேருலகத்தில் 'வாழ்வு’ என்ற ஒரு தத்துவப் புதிருக்கு வேண்டிய மூலிகைகள் இரண்டே இரண்டு இடங்களில்தான் கிடைக்கின்றன அரசே! ஒன்று மலை மற்றொன்று கடல்”

“வீண் விவாதம் எதற்கு நக்கீரரே? ஒரு நாள் என்ன? ஒரு வாரம் ஆனாலும் உம்முடன் பொதியமலைக் காடுகளில் சுற்று வதற்கு நான் தயார்! 'தத்துவம்' எப்படியாவது விளங்கினால் சரி.”

2

அரசவையில் இந்த விவாதம் நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்குப் பின் எளிய உடையும், தோற்றமும் கொண்டு நக்கீரரைப் பின்பற்றிப் பொதியமலைக் காடுகளில் சுற்றிக் கொண்டிருந்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.

காட்டு வழியில் நடந்து சென்று கொண்டே இருக்கும்போது திடீரென்று நக்கீரர் பாண்டியனுக்கு ஒரு மரத்தடியைச் சுட்டிக் காட்டினார். அவன் பார்த்தான். ஆச்சரியத்துக்குரிய எந்தக் காட்சியும் அங்கே மரத்தடியில் தென்படவில்லை. காட்டுப் பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றைத்தான் அவன் அங்கே கண்டான்.

குரூரமான தோற்றத்தையுடைய ஒரு வேடன் அங்கே மரத்தடியில் வில்லும் கையுமாகக் காத்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் சுற்றும்முற்றும் வேட்டைக்குரிய மிருகங்கள் எவையேனும் வருகின்றனவா என்று சுழன்று சுழன்று துழாவிக் கொண்டிருந்தன. பறவைகளைப் பிடிப்பதற்காகப் பக்கத்திலே அவனே வலையும் விரித்திருந்தான். ஆனால் வலையில் அன்று அதுவரை ஒரு பறவைகூடச் சிக்கியதாகத் தெரியவில்லை.