பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

31


“அது சரி! பார்த்தாகிவிட்டது. இந்த வேடன் மரத்தடியில் வில்லோடு நின்று கொண்டிருப்பதிலிருந்து என்ன தத்துவம் கிடைக்கிறது நக்கீரரே?”பாண்டியன் கேட்டான்.

நக்கீரர் அவனுக்கு மறுமொழி சொல்லவில்லை; ‘பொறு! பின்பு சொல்லுகிறேன்’ என்பதற்கு அறிகுறியாகக் கையால் ஜாடை காட்டிவிட்டு அவனையும் அழைத்துக்கொண்டு அந்த வேடனை நெருங்கினார்.

“ஏன் அப்பா, இப்படி வில்லும் கையுமாக இங்கேயே காத்திருக்கிறாய்?” நக்கீரர் வேடனை நோக்கிக் கேட்டார்.

“அதையேன் கேட்கிறீர்கள் ஐயா? நேற்று நடு இரவிலிருந்து காத்துக் கிடக்கிறேன். உறக்கமில்லை. உணவில்லை.இதுவரை ஒரு மிருகம்கூட வேட்டைக்கு அகப்படவில்லை. போங்கள்!”

வேடனின் இந்த மறுமொழியைக் கேட்டு நக்கீரர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியைப் பார்த்து ஒரு இளநகை புரிந்தார். ஆனால் நக்கீரர் எதற்காகத் தன்னை நோக்கி அப்படி நகைத்தார் என்பதன் விளக்கமே பாண்டியனுக்கு அப்போது தெளிவாகவில்லை.

“ஆமாம்; நீ ஏன் காட்டிலுள்ள மிருகங்களை வேட்டையாடுகின்றாய்? வேறு வகையில் நீ வாழ முடியாதா?” நக்கீரருடைய இந்த இரண்டாம் கேள்வி அந்த வேடனைச் சற்றே திடுக்கிடும்படியாகச் செய்தது. ஆயினும் சமாளித்துக்கொண்டு விடை கூறினான் அவன்.

“ஐயா! உண்டு, உடுத்து வாழ வேண்டிய மனிதன்தானே நானும்? மிருகங்களை வேட்டையாடுவது இழிதொழில்தான். ஆனால், நான் இந்தத் தொழிலை விட்டுவிட்டால் உண்ண இறைச்சிக்கும், உடுக்கத் தோலுக்கும் எங்கே போவேன்? கல்வியறிவற்ற காட்டுப்பயலான எனக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாதே ஐயா!”

வேடன் இந்த விடையைக் கூறி முடித்ததும் நக்கீரர் மீண்டும் பாண்டியனை நோக்கிப் பொருள் பொதிந்த சிரிப்பு ஒன்றை