பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

33


“பாண்டிய மன்னா! உனக்கும் எனக்கும் இந்த வேடனுக்கும் இன்னும் எண்ணற்ற எல்லா மனிதர்களுக்கும் உயிர்வாழ உணவும், மானத்தை மறைக்கத் துணியும் என்ற இந்த இரண்டு தேவையும் அவசியம்தானே? இதில் ஏதும் வேற்றுமை கற்பிக்க முடியாது அல்லவா?”

“ஆமாம்! உணவு, உடை இவை பொதுவானவைதான்? மேலே சொல்லுங்கள்:”

“மன்னராகிப் பிறருக்குச் சிறிதும் உரிமையின்றிக் கடல் சூழ்ந்த ஒரு நாடு முழுவதையுமே ஒரு குடைக்கீழ் ஆளும் பேரரசன் நீ! ஆனால் எனக்கும் இந்த வேடனுக்கும் உனக்கும் இறைவன் அளித்திருக்கும் கைகால் முதலிய அவயவங்கள் ‘கூடக் குறையவா’ இருக்கின்றன.”

“இல்லை வேடனுக்கும் உங்களுக்கும் அரசனாகிய எனக்கும் - ஏன் எல்லோருக்குமே இறைவன் கொடுத்த உடல் ஒரே அமைப்புள்ள உடல்தான்.”

“அரசே செல்வத்தாலும் பதவியாலும், உங்களுக்கும் இந்த வேடனுக்கும் வேறுபாடு இருக்கலாம்! உனக்குச் செல்வத்தைக் கொடுத்த இறைவனும், வேடனுக்கும் உனக்கும் வேற்றுமை கற்பித்துக் காட்ட ஒரு கருவியாக அதை அளித்தானில்லை. பிறருக்கு ஈதல், அறம் செய்தல் முதலிய செயல்களுக்காகவே அந்தச் செல்வத்தை உங்களிடம் அளித்துள்ளான் இறைவன். அதை நீங்களாகவே அனுபவித்து விடவும் முடியாது. அனுபவித்தால் அது உங்களிடம் நிலைக்கவும் நிலைக்காது. விரைவில் தப்பிச்சென்றுவிடும்.எனவே கடல் சூழ்ந்த உலகத்தைத் தன் ஒரே வெண் கொற்றக்குடைக்கீழ், பிறரெவர்க்கும் சொந்தமின்றி ஆளும் ஏகச்சக்ராதிபதிக்கும், இரவும் பகலும் தூங்காமல் வில்லால் வயிற்றுக்கு உணவும் உடலுக்கு உடையும் தேடும் படிப்பறிவில்லாத இந்த வேடனுக்கும் வாழ்க்கை அடிப்படை ஒன்றுதான்!” நக்கீரர் கூறி நிறுத்தினார்.

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி நக்கீரரைக் கைகூப்பி வணங்கினான். “பாவலர் திலகமே! உண்மை புரிந்துவிட்டது.