பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

புறநானூற்றிலுள்ள ஒரு சம்பவத்தைச் சித்திரிக்கும் பாங்கிலமைந்த பாடல்களை எளியநடையில் கதை சொல்வது போன்று விளக்கும் முயற்சியே இந்தப் புத்தகம்.

இவை புறநானூற்றுச் சிறுகதைகள் என்ற தொடராகச் சுதேசமித்திரன் வார மலரில் முன்பு நான் எழுதியவை. மாணவர்களுக்கோ சின்னஞ்சிறுவர்க்கோ, நேரே புறநானூற்றுப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் பாடல்களையும், பதவுரையையும் படித்தால்கூட இவற்றில் இவ்வளவு சுவையான சம்பவமோ, கதையோ, நிகழ்ச்சியோ அமைந்திருப்பது புரிந்துவிடாது.ஆனால் இந்நூலில் பாடல்களுக்கு முன்பாக இங்கு விவரிக்கப் பட்டிருப்பதுபோல, விவரிக்கப்பட்ட விளக்கத்தைப் படித்தால் புறநானூற்றுப் பாடலிலுள்ள சுவை புலப்படும். இவற்றில் நான் விளக்க எடுத்துக் கொண்டவை போன்ற தேர்ந்தெடுத்த சிலவற்றை விளக்கும் மாணவர்களுக்கான துணைப்பாடநூல் ஒன்றை முன்பு நானே எழுதினேன். மாணவர்களிடையே அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பல பதிப்புக்கள் துணைப்பாடமாக அந்நூல் இருந்தது.

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றையவர்களுக்கும் பயன்படுகிற விதத்தில் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட புறநானூற்றுப் பாடல்களுக்கு இங்குக் கதை வடிவ விளக்கம் தரப்பட்டிருக்கிறது. புறநானூற்றின் பிறபகுதிகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த நாற்பதுக்கு மேற்பட்ட பாடல்களின் விளக்கம் துண்டுமானால் இந்நூலாசிரியரின் நோக்கம் நிறைவேறினாற்போலத்தான்.