பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

புறநானூற்றுச் சிறு கதைகள்


வீழும் அருவி, துள்ளும் மான்கள் எல்லாம் கண்டு இன்புற்றான். ஆனால் இந்த எல்லா வகை நிம்மதிகளுக்கும் இடையே ஒரு கவலையும் அவன் மனத்தை அரித்துக் கொண்டுதான் இருந்தது. அதுதான் தமிழ்ப் புலவர்களைப் பற்றிய மனக்கவலை.

அவன் ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற தமிழ்ப் புலவர்களை ஆதரித்து வந்தான். கவிச் செல்வர்களாகிய அவர்கள் புவிச் செல்வத்துக்காக ஏங்காமல் பாதுகாத்து வந்தான். ‘அறிவு நிறைந்தவர்களை வாழ்வுக்கு ஏங்கும்படியாக விட்டுவிட்டால் தன் நாட்டிற்கே அது ஒரு பெரிய சாபக்கேடாகப் போகும்?’ - என்பதை அவன் உணர்ந்திருந்ததுதான் இதற்குக் காரணம். தன் தம்பி இளங்குமணனிடம் புலவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற உணர்ச்சி சிறிதும் இல்லை என்பதை அவன் அறிவான். முன்பு தன்னால் பேணி வளர்க்கப்பட்ட தமிழ்ச் செல்வர்களின் கதி இப்போது என்ன நிலைக்குத் தாழ்ந்து விட்டதோ என்பதுதான் அவனுடைய கவலை. இப்படி அவன் கவலைப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்தான் பெருந்தலைச் சாத்தனார் அவனைத் தேடிக்கொண்டு காட்டுக்கு வந்து சேர்ந்தார்.

குமணன் அவரை ஆவலோடு வணங்கி வரவேற்றான். பெருந்தலைச் சாத்தனர் நாடிழந்து தனி ஆளாக வனத்தில் நிற்கும் அவன் நிலை கண்டு உள்ளம் உருகினார்.

“என்ன சாத்தனாரே! யாவும் நலம்தானே? முன்பு பார்த்த உம்முடைய தோற்றம் இப்போது இளைத்திருக்கிறாற்போலத் தோன்றுகிறதே”

“இளைக்காமல் என்ன செய்யும் குமணா! அன்பு செலுத்த நீ யில்லை. ஆதரவு கொடுக்க உன் கைகளில்லை. வாழ்க்கை இளைத்துவிட்டது. நானும் இளைத்துவிட்டேன். வீட்டு அடுப்பு எரிந்து பல நாட்களாகிவிட்டன. குழந்தை பாலுக்காகத் தாயின் மார்பைச் சுவைத்துப் பாலின்றி ஏமாற்றமடைந்து தாயின் முகத்தைப் பார்க்கிறது. தாய் என் முகத்தைப் பார்க்கிறாள். நான் வேறு யார் முகத்தைப் பார்ப்பது? உன் முகத்தைக் காண வந்தேன்?"