பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

67


“இதோ! இவைகள் எல்லாம் அம்புகள்; இவைகள் எல்லாம் புதிதாகச் செய்த வேல்கள் இந்த மாதிரி அமைப்புள்ள வேல்களை இதுவரை எந்த அரசனுமே செய்ததில்லை. என்னுடைய இந்தப் படைச் சாலையிலிருக்கும் இவ்வளவு ஆயுதங்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த அரசனுடைய படைச்சாலையிலாவது இருக்க முடியுமா? ஒளவையாரே! நீங்கள் கூறுங்கள்”அவனுடைய இந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் முதலில் திகைத்தார் ஒளவையார். பின் ஒருவாறு தம்மைச் சமாளித்துக் கொண்டு,

“ஆமாம்! ஆமாம்! இவ்வளவு ஆயுதங்கள் வேறு யாரிடம் இருக்க முடியும்? உன்னிடம் அளவுக் கதிகமான ஆயுதங்கள்தாம் இருக்கின்றன” என்று ஒத்துப்பாடினார்.

“அளவுக்கு அதிகமான ஆயுதங்கள் மட்டுமில்லை. என் படைபலமும் இப்போது அதிகமாகத்தான் இருக்கிறது. எந்த அரசனும் இப்போது சுலபமாக இந்த நாட்டின் மேல் படையெடுத்து வென்றுவிட முடியாது!”

“ஓஹோ, அப்படியா..?”

“வில், வாள், வேல், கவசம் என்று எவ்வளவு அழகாகவும் வரிசையாகவும் ஆயுதங்களை அடுக்கி முறைப்படுத்தி வைத்திருக்கிறேன் பார்த்தீர்களா?”

“ஆமாம். ஆமாம்.”

“அது சரி! உங்கள் அதியமானுடைய படைச்சாலை இந்த மாதிரி இருக்குமா? அதைப் பற்றி என்னிடம் ஒன்றுமே கூறமாட்டேன் என்கிறீர்களே”

“அதியமானைப் பற்றி நீ கேட்க வேண்டும் என்று விரும்புகிறாயா?”

“கட்டாயம் விரும்புகிறேன் அம்மையாரே!”

“அப்படியானால் சொல்லுகிறேன்.தெரிந்துகொள். ஆனால் ஒன்று.”