பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

75


விசாரித்து விசாரித்து வாய் அலுத்துவிட்டது கிழவிக்கு. ஒன்றும் செய்யத் தோன்றாமல் ஏமாற்றம் நிலவ அப்படியே நின்றுவிட்டாள்.

ஆரம்பத்திலிருந்து இந்தக் கிழவியின் செய்கைகளையும் பரபரப்பையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தெருவோரத்தில் நின்றனர் சில விடலைப் பிள்ளைகள். இவர்களில் ஒருவனுக்கு இந்தக் கிழவியின் மகன் என்ன ஆனான் என்ற உண்மை தெரியும். கிழவியின் மகன் மார்பிலே புண்பட்டு வீர சுவர்க்கம் அடைந்துவிட்டான் என்பதை இவன் எப்படியோ விசாரித்து தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான்.

தங்களுக்குத் தெரிந்த உண்மையை வேறொருவிதமாக மாற்றிச் சொல்லிக் கிழவியை ஏமாற்றி வேடிக்கை பார்க்க வேண்டும் என்று ஒரு குறும்புத்தனமான ஆசை இவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. விடலைப் பிள்ளைகள்தானே?. அதனால் விடலைத்தனமான ஆசை ஏற்பட்டது.

“கிழவி! கிழவி” உன் மகன் என்ன ஆனான் என்பது எங்களுக்குத் தெரியும்.” தாங்களாகவே வலுவில் கிழவிக்கு முன்போய் நின்றுகொண்டு இப்படிக் கூறினார்கள் இவர்கள்.

“அப்படியா? நீங்கள் நன்றாயிருக்க வேண்டும். உங்களுக்கு எல்லா நன்மைகளும் பெருகட்டும்.என் மகன் எங்கேயிருக்கிறான் அப்பா?”

“பாட்டி சொன்னால் கோபித்துக் கொள்ளமாட்டீர்களே?”

“கோபம் என்ன பிள்ளைகளா? சொல்லுங்கள்...”

“உன் மகன் இப்போது இந்த உலகத்திலேயே இல்லை. போரில் பகைவர்களுக்குப் புறமுதுகுகாட்டி ஒடி முதுகில் அம்பு பாய்ந்து இறந்து போய்விட்டான்.”

“என்ன? என்ன? என் மகனா? புறமுதுகு காட்டியா இறந்தான்? இருக்காதப்பா. அவன் மானமுள்ளவன். கனவிலும் அப்படி இறக்க நினைக்கமாட்டானே?”

“நாங்கள் பொய்யா சொல்கிறோம்?”