பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

புறநானூற்றுச் சிறு கதைகள்


பயனற்ற தினங்களாகக் கணக்கிடுவதும் அவன் வழக்கங்களாக இருந்தன.

உடலிலுள்ள ஆடைஅணிகளைக் களைத்து விட்டுப் பிறந்த மேனியோடு நின்றானானால் காண்பவர்களின் கண்களுக்கு ஒரே அருவருப்பாக இருக்கும். வில்லம்புகளும்,வேல் நுனிகளும் வாள் நுனிகளும் குத்தியும் கீறியும் ஆழப்பதிந்தும் உண்டாக்கிய வடுக்களும் தழும்புகளும் நிறைந்த அவன் தேகம் காண்பதற்குப் படுவிகாரமாக இருக்கும்.

ஏனாதி திருக்கிள்ளிக்குப் புலவர்களில் பலர் நெருங்கிய நண்பர்கள்.அத்தகைய நண்பர்களில் மதுரைக் குமரனார் என்பவர் மிகவும் முக்கியமானவர். திருக்கிள்ளியோடு பல விதங்களிலும் நெருங்கிப் பழகுகிறவர். தயங்காமல் பயப்படாமல் அவனிடம் எதைப் பற்றியும் துணிவாக எடுத்துப் பேசும் தைரியம் அவருக்கு உண்டு.

ஒருநாள் ஏனாதி திருக்கிள்ளியும் மதுரைக் குமரனாரும் தனிமையில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென்று எதையோ எண்ணிக் கொண்டு கேட்பவர்போலக் குமரனர் கிள்ளியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

“அரசே! சிந்தித்துப் பார்த்தால் உன்னைப் புகழ்வதா, உன் பகைவர்களைப் புகழ்வதா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது!”

“ஏன்? இதென்ன புதுமாதிரிச் சந்தேகமாக இருக்கின்றதே!”

“புதுமை ஒன்றும் இல்லை! ஒரு விதத்தில் பார்த்தால் உன்னைக் காட்டிலும் உனக்குத் தோற்றுப்போய் ஒடுகிறவர்கள் சாமர்த்தியசாவிகளாய்த் தோன்றுகிறார்கள்? வெற்றி பெற்றாலும், போருக்குப் போர் ஏமாறுகிறவன் நீதான்!”

“அதென்ன புலவரே புதிதாக ஏதோ புதிர் போடுகிறீர்கள்! எந்தப் போரிலும் யாருக்கும் நான் தோற்றது இல்லையே? நான் எப்படி ஏமாளி ஆவேன்?”