பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

101



பிரான்ஸ் நாட்டுக்கு, உலக அளவில் பட்டுத் தொழில் மூலமாகப் பெயரும் - புகழும்; அதே நேரத்தில் ‘பிரான்ஸ் பட்டு’ என்றால், இன்று நம்மிடையே ‘காஞ்சிபுரம் பட்டுக்கு எவ்வளவு மரியாதையோ, அதே மரியாதையையும், அதே மதிப்பையும் பிரான்ஸ் நாடு பெற்றிருந்தது.

ஆயிரக் கணக்கான பிரான்ஸ் மக்கள் வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், அதன் வாயிலாக வணிகப் பெருமக்கள் அந்தந்த நாடுகளிலே பிரான்ஸ் பட்டுத் துணிவகைகளை நம்பி, வியாபாரம் செய்து செல்வந்தர்களாக வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.

உலக நாடுகள் இடையே தொடர்ந்து பெற்று வந்த நீடித்த பட்டுத் தொழிலின் செல்வாக்கு நிலை, பிரான்சில் திடீரெனத் தடைப்பட்டு நின்றது. அதனால், ஆயிரக் கணக்கான பிரெஞ்சு நெசவாளர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்தார்கள்.

நடக்கும் அற்ப சொற்ப பட்டுத் தொழில் துறைத் தொழிலாளர்கள், ‘ஷிப்டு சிஸ்டம்’ என்ற முறையில், அதாவது ஒரே நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை, ஆட்குறைப்பு செய்து, அவர்களுள் சிலருக்கு வேலை கொடுப்பதும், வேலையில்லாத் திண்டாட்டமும் போன்ற நெருக்கடி முறைகள் மக்களிடையே உருவாயின.

இந்த பட்டுப் பணிகள் பூச்சித் தொல்லைகள் தரும் நெருக்கடிகளால் எண்ணற்ற பட்டாலைகள் மூடப்பட்டு விட்டன: குடும்பங்கள் நடத்தி வந்த பட்டு நெசவுக் குடும்பத் துறைத் தொழில்களும் நசிந்து விட்டன.

நூற்றுக் கணக்கான தொழிற் கூடங்கள் மூடப்பட்டு விட்டதால், பிரான்ஸ் நாடு முழுவதும் பரவலாக உள்ள ஆயிரக் கணக்கான பட்டுத் தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் தொழில்களை இழந்ததுடன், அதன் எதிரொலியான பசி, பட்டினிகளால் வேதனையடைந்து, சிலர் வறுமைக்கும், புதை குழிக்கும் பலியானார்கள்.