பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

11


பற்றி, அதன் முக்கியத்துவத்தைப் பற்றி - ஓரளவாவது புரிந்து கொண்டால்தான், அந்த இதயத்துக்காக அரும்பாடுபட்ட ஒரு மருத்துவ மேதையின் உண்மையான உழைப்பின் மகத்துவத்தை நம்மால் அறிய முடியும்!

இதயம் பற்றி, திருக்குறள்?

வரம்பு மீறிய ஒரு கொடுங்கோலன் மக்கள் உயிர்களை எல்லாக் கோணத்திலும் வாட்டி வதைக்கும் போது, அவனை நாம் இதயமில்லாதவன் என்று கடுமையாகக் கண்டனம் செய்கிறோம்! காதலுக்கு எதிர்ப்பு எழுப்பும் பெற்றோர்களது கட்டுப்பாடுகளை விமரிசனம் செய்யும்போதும், அவர்களை நாம் இதயமில்லாதவர்கள் என்று பெற்ற பிள்ளைகளே குற்றம் சாட்டுகின்ற அளவுக்கு; இதயம் ஓர் அளவுகோலாக மதிக்கப்படுகின்றது - மனித நேயத்தால்!

இதயம் இளகாதவர்களைக் கல்நெஞ்சர் என்றும், அன்பு, இரக்கம், கருணை, விசுவாசம், மனிதாபிமானம், இன்னும் என்னென்னமோ கூறப்படும் சொற்களால் இதயத்தை நாம் வருணனை செய்கிறோம். அவ்வளவு ஒரு முக்கியமான உறுப்பாக இதயம் மக்களால் போற்றப்படுகின்றது.

திருவள்ளுவர் பெருமான்கூட, இளம் காதலர் நெஞ்சங்களின் பெருமையைக் குறிப்பிடும்பொழுது, அதுவும் ஒரு பெண்ணைக் காதலிக்கும் இதயத்தைப் பெருமைப்படுத்திப் பேசும்போது,

"நெஞ்சத்தார் காத லவராக;வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்(கு) அறிந்து”

என்ற ஒரு குறளில், “காதலி மனத்தில் குடிபுகுந்து நிலைத்துவிட்ட காதலருக்கு இதயம் சுட்டுவிடும் என்பதால், அந்தக் காதலி சூடான உணவுப் பொருட்கள் எதையும் சாப்பிட அஞ்சுவாள்” என்கிறார்! ஏன் தெரியுமா?

அவளது இதயத்தில் குடிகொண்டிருக்கும் அன்புக்குரிய நாயகனுக்கு, காதலி சூடாக எந்த ஒரு உணவைச் சாப்பிட்டாலும்