பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

மருத்துவ விஞ்ஞானிகள்


அழித்த விவரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதை லிஸ்டர் படித்தார்.

அந்த நூலை லிஸ்டர் வாங்கிப் படித்தார். அந்த நூலில் பாஸ்டியர் செய்த ஆராய்ச்சி இருந்தது. கிருமிகளைக் கொல்லும் லூயி பாஸ்டியர் சிகிச்சை முறையில் லிஸ்டருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. என்ன அந்த லூயி பாஸ்டியர் முறை?

அறுவை சிகிச்சை செய்த பிறகு, காற்றினாலும், வேறு சில பொருட்களாலும் கிருமிகள் காயத்தில் படுவதால் அந்த விஷக் கிருமிகள் நோயாளியின் காயங்கள் மூலமாக உடலில் சென்று மரணத்தை உண்டாக்கி விடுகின்றன என்பது தான் லூயி பாஸ்டிய முறை. இந்த முறையைப் படித்த லிஸ்டர் அதை மேலும் ஆராய்ச்சி செய்தார்.

நீண்ட சோதனைக்குப் பிறகு லிஸ்டர், லூயி முறையிலிருந்து வேறு ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்தார்.

கார்பாலிக் ஆசிட் பயன்

அதாவது அறுவை சிகிச்சைக்குப் பிறகு, காயத்தைக் கார்பாலிக் ஆசிட் தோய்ந்த துணிகளால் கட்டினால், காயத்திலே படிந்து விட்டக் கிருமிகள் கொல்லப்படுவதுடன், வெளியிலே உள்ள கிருமிகள் காயத்தின் உள்ள நுழையாமல் தடுக்கப்படும் என்பதுதான் ஜோசப் லிஸ்டர் கண்டுபிடித்த புதிய முறை ஆகும். இந்த சிகிச்சை முறையை லிஸ்டர் தனது பராமரிப்பில் உள்ள நோயாளிக்குச் செய்தார். அதனால், நோயாளி விரைவாகக் குணமடைந்ததுடன், மரண விகிதமும் குறையலாயிற்று.

ஒரு சிறுவன் கால்கள் மீது வண்டி ஏறியதால் அந்தச் சிறுவனுடைய கால் ஒன்று முறிந்து விட்டது. இப்படிப்பட்ட நோயாளிக்கு என்னதான் சிகிச்சையை எவ்வளவு சிரமப்பட்டுச் செய்தாலும் அவன் இறந்துதான் போவான்.

அந்தச் சிறுவனுக்கு ஜோசப் லிஸ்டர் தனது புதிய கண்டுபிடிப்பின்படி சிகிச்சை செய்தார். அவனுடைய கால் முறிவு குணமானது. எழுந்து நடக்க ஆரம்பித்தான் அவன்.