பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

மருத்துவ விஞ்ஞானிகள்


கனலாகவே இருந்தது. இலண்டன் நகரிலும் அந்த எதிர்ப்புகள் வளர்ந்திருந்தன.

இலண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் ஜோசப் லிஸ்டர் மருத்துவப் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார். அங்கே பணியாற்றும்போது, தனது கண்டுபிடிப்பு முறையைப் பற்றி விளக்கமாகச் சொற்பொழிவாற்றி வந்தார்.

இலண்டன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தாங்கள் படித்து தேர்வாக வேண்டும் என்றும், பட்டம் பெற வேண்டும் என்றும் விரும்பினார்களே தவிர, ஜோசப் லிஸ்டரின் சிகிச்சை முறையை எவரும் பின்பற்ற விரும்பவில்லை. அங்குள்ள நோயாளிகள் அறுவை சிகிச்சையால் வருந்துவதைக் கண்டு லிஸ்டர் மன வேதனைப்பட்டார்.

என்ன செய்வது, அவரவர்கள் நோயாளிகளை அவரவர் மருத்துவர்கள் தானே கவனிக்க வேண்டும். மற்றவர்களது நோயாளிகளை வலிய போய் சிகிச்சைப் பார்ப்பது தவறு என்று கருதிய லிஸ்டர், மனம் வருந்தாமல் வேறு என்ன செய்வார்?

ஜோசப் லிஸ்டரின் அறுவை சிகிச்சை முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் இலண்டனில் நிறைய பேர்கள் இருந்தார்கள். என்ன செய்வது? முதலையும் - மூர்க்கமும் பிடித்தப் பிடியை விடாதல்லவா?

இந்த மருத்துவ மனையிலிருந்த டாக்டர்கள் ரத்தக் கறை படிந்த ஆடைகளை உடுத்திக் கொள்வதிலே அதிக ஆர்வமாக இருந்தார்கள். ஏன் தெரியுமா? இந்த ஆடைக் கறைகள்தான் அவர்களுக்குரிய திறமையின் அடையாளம் என்ற நினைப்பு அவர்களுக்கு!

அவர்கள் மருத்துவம் செய்யும் மனைகள் கூட ஒரே இருட்டாகவும், அசுத்தமாகவும், பேய் மாளிகை போலவும் இருந்தன. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கேற்றவாறு ஜோசப் லிஸ்டர் நிர்வாகிகளிடம் பேசி, மருத்துவ மனையைப் புதுப்பித்தார். அந்த மருத்துவர்களையும் தங்களது ஆடைகளையும் ரத்தக்கறை இல்லாமல் அணியுமாறு வேண்டினார்.