பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





45. தமிழ்மொழி வாழ்த்து


ஆதியில் தமிழினில் அரியதோர் இலக்கணம்
      அமைத்தொளிர் அகத்தியர் பெயர்வாழி
நீதியில் நிகரற நிலவிடு திருக்குறள்
      நிறுவிய வள்ளுவர் பதம்வாழி. 1

சிலப்பதி காரம்,தொல் காப்பியம், சீவக
      சிந்தா மணி,செய் தோர்வாழி;
புலவர்கள் பலர்பலர் பரிவொடு பாடிய
      புகழ்பெறு நாலடி யார்வாழி. 2

தந்தையின் மொழிதவ றாரகு நாதனின்
      தகைமைசொல் கம்பர்தம் நூல்வாழி;
நந்தமக் காகவே நல்வழி நீதிகள்
      நல்கிய அவ்வையின் சீர்வாழி. 3

சிற்பமோ டோவியம் சீர்மிகு மருத்துவம்
      செப்பிய புலவர்கள் திறம்வாழி;
அற்புத அடியவர் ஆழ்வார் பாடிய
      அழகொளிர் பாடலின் புகழ்வாழி. 4

நூறுநூ றாயிரம் நூல்கள் இயற்றிய
      நுண்ணறி வாளர்தம் வழிவாழி;
வேறுநற் கலைபல சீருடன் வெளிவர
      வேண்டிடு வோம்தமிழ் மொழிவாழி. 5