8
ரோஜா இதழ்கள்
அவனுக்கு. அஞ்சு குழந்தைகள். சாப்பாட்டுக்கே வராத தரித்திரம். ரஞ்சிக்கு மட்டும் என்ன? இளையாளைப் போல வயசு வித்தியாசத்தில் கொண்டுக் கட்டியிருக்கா. மூணு குழந்தையாச்சு, அவனுக்கும் மட்டுச் சம்பளம். பெங்களூரில் ரேஸ், தண்ணி எல்லாம் இருக்கு. நீங்களெல்லாரும் அழகில் குறைச்சலா, புத்திசாலித்தனம்தான் குறைச்சலா?... எச்சுமு கூடச் சொல்லுவா. சிவப்புன்னா சிலது சந்தனக் குழம்பா இருக்கும். சிலது எலுமிச்சை மஞ்சளா இருக்கும். ரோஜா, சந்தனம், எலுமிச்சை எல்லாம் கலந்த ஒண்ணும் தூக்காத கலர் மைத்ரேயிக்குன்னு. உங்கப்பாவின் நிமிர்ந்த களை உனக்குத்தான் அப்படியே வந்திருக்கு. இப்ப என்ன குறைஞ்சு போச்சு?...” மாமா ஒரு மூச்சு பேசி முடித்து விட்டு ஒரு நிதானத்துக்கு வருகிறார்.
மெல்லிய புன்னகை இதழ்களில் விளையாடுகிறது.
“இப்ப எங்கே, எந்தப் படத்துக்குப் பாட்டெழுதறார்மா ?”
“இப்ப ஒண்ணும் எழுதலே. ஆனா சான்ஸ் உடனேயே வரும்னார்...” இப்போதும் அவளுக்குத் தலைநிமிர்ந்து சொல்லக் கூச்சம் தெளியவில்லை.
“இந்தக் காலத்தில் சினிமால லைட்பாய்னாக்கூட மதிப்பாத்தான் இருக்கு. கவிஞன். யாரு கண்டா? உன்னை அடுத்த தடவை பங்களா கார்னு பார்ப்பேனாக இருக்கும்.”
அவளுக்கு முகம் சிவக்கிறது. “நின்னுண்டே பேசறேளே மாமா, உக்காருங்கோ...”
சருகுகளெல்லாம் பஞ்சுப் பிசிறுகளாக எழும்பிச் செல்கின்றன. உணர்ச்சிகள் இலேசாகின்றன.
“நீங்க எப்ப புறப்பட்டு எப்படி இங்கே கண்டு பிடிச்சிண்டு வந்தேள் மாமா ?”
“சைதாப்பேட்டையில் போயி வக்கீலைப் பார்த்தேன். நேசமுடையாரை நெஞ்சில் நினைச்சாலே நேரில் பார்க்கலாம்னு சொல்லுவா. அப்படித்தான் ஆச்சு. வக்கீல் வீட்டில