பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

19

“கொஞ்சம் தண்ணி வுடுறீம்களா? தாகமாயிருக்கு” தனிமையோடு புழுங்கிக்கொண்டிருந்த மைத்ரேயிக்கு அந்தக் குழந்தை முகத்தைக் கண்டதுமே மகிழ்ச்சியாக இருந்தது. கண்ணாடித் தம்ளரில் தண்ணீரை முகர்ந்துகொண்டு வந்தாள்.

“இந்தா...”

வாயருகில் கைகளை வைத்துக்கொண்டு குனிந்தாள் சிறுமி.

“எனக்கு விடத்தெரியாது. நீ வாங்கிக் குடியேன்”

“நான் தொடலாங்களா?”

“தொடலாம்...”

தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு அவள் தம்ளரைக் கல்லில் கவிழ்த்து வைத்தாள்.

“உன் பேரென்ன?”

“லட்சுமி...”

பிறகு அவள் கரண்டாபீசுக்குப் பின்னிருக்கும் சேரிக் குப்பத்திலிருந்து ஆடு மேய்க்க வருவதாகவும், அவளுடைய அண்ணன் தோல் கிடங்கில் வேலை செய்வதாகவும் குடும்ப விவாங்களைக் கூறினாள். லட்சுமி இரண்டாம் வகுப்புக்குப் போகுமுன்னே படிப்பை நிறுத்திவிட்டாள். அவளுக்கு இரண்டு அக்காள்மாரும் ஒரு தம்பியும் இருக்கின்றனர். ஒரு அக்கா மட்டும் எப்போதேனும் வயல் வேலைக்குப் போகிறாள். காலையில் நீராகாரம் குடித்துவிட்டு அவள் ஆடு மேய்க்க வருகிறாள். மாலையில் பெரியக்காள்தான் சோறாக்குவாள். கடலை உருண்டை வாங்கித் தின்ன அண்ணன் சம்பளம் வரும் நாளில் காசு கொடுப்பான். அம்மாவுக்குச் சீக்கு.

லட்சுமி இப்போது சிரித்துக்கொண்டு, “உங்க மாமனா அவுரு?” என்று கேட்கிறாள்.

“ஆமாம்... எப்படிக் கண்டுபிடிச்சே?”

“எனக்குத் தெரியும், தெரியும்...” என்று முகத்தில் குறும்பு மின்னத் தலையாட்டும் லட்சுமி, “உன்னைப் போலவே செழுப்பா இருக்கிறாரக்கா...” என்று கருத்துத் தெரிவிக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/21&oldid=1099683" இலிருந்து மீள்விக்கப்பட்டது