பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ரோஜா இதழ்கள்

இரத்த உறவின் பிணைப்புக்களை எல்லாம் விட்டுத் திசை புரியாத சந்தியில் நிற்கும் அவளுக்கு லட்சுமியை அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. சுமதியின் பெரிய பெண் சுதாவுக்கு உடல் முழுவதும் சிரங்காக இருக்கும். அவற்றுக்கு மருந்து போட்டுக் குளிப்பாட்டி, அலுக்காமல் பவுடர் போட்டு தூக்கிச் சுமப்பாள். எந்தக் குழந்தையும் அவளிடம் ஒட்டிக் கொள்ளும். முன்பு ஆறாவது படித்துக் கொண்டிருக்கையில் பெரிய விடுமுறைக்கு அவள் மாமாவின் ஊருக்குச் சென்றிருக்கிறாள். அங்கும் அந்த நட்டுவை அவள் எப்படித் தூக்கிச் சுமந்தாள்? “நீ ஊருக்குப் போயிட்டால் இந்தப் பிள்ளை ஏங்கிப் போயிடும் போலிருக்கே?” என்று மாமிகூடச் சொல்லி இருக்கிறாள்...

குழந்தைகளைப் பற்றிய சிந்தனை படர்கையில் இன்னொரு இனம் புரியும் திகில் அவளைக் கவ்விக் கொள்கிறது. அவள் தன்னுடைய கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருக்கும் சுதந்திர இறக்கைகளைப் பறிகொடுத்து விடுவாளோ?

அவன் எப்போதேனும் பத்து இருபது பணம் கொடுக்கும்போது எடுத்துக்கொண்டு இந்த பந்தத்திலிருந்து விடுபட்டு ஓடிவிடலாம்.

ஆனால். ஒரு எஸ்.எஸ்.எல்.ஸி பரிட்சைகூடத் தேர்ந்திராத அவளுக்கு யார் வேலை கொடுப்பார்கள்?

ஏதேனும் ஹோமில்...

மாமா சொன்ன லோகநாயகியின் நினைவு வருகிறது. அப்படி ‘சோஷியல் வொர்க்’ செய்யும் அம்மாளிடம் சென்று தன் கதையைச் சொல்லலாம். ஒரு டாக்டரிடம் எடுபிடியாக, ஒரு பணக்காரப் பெண்ணுக்குத் தோழியாக...

லோகநாயகியின் வீடு அவளுக்குத் தெரியாது. பட்டணத்துக்கு எப்போதோ கிறிஸ்துமஸ் சமயத்தில் அக்காவும் அத்திம்பேரும் அவளை வேடிக்கை பார்க்க அழைத்துச் சென்றதுதான்.

“அப்ப... நான் வாரேன் அக்கா! பொழுது சாஞ்சி போச்சி!”

“போறியா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/32&oldid=1099706" இலிருந்து மீள்விக்கப்பட்டது