பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ரோஜா இதழ்கள்

படியேறியதும் வாசல் நிலை. பழைய காலப் பாணியில் தேக்கில் இழைத்த தாமரைப்பூவும் கிளிகளுமாக விளங்கு கிறது. கறுப்பாக மின்னும் தளவரிசைக் கூடம். அந்தக் கூடத்தின் வலப்புற வாயிலிலிருந்து ஒரு பெண்மணி வந்து அவளை வரவேற்கிறாள். அவளுக்கு முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயசுக்குள் இருக்கலாம். நல்ல உயரமும் பருமனுமான உடல்வாகு. சேலையைப் பின் காலின் கொசுவம் தெரியாமல் தழையத் தழைய உடுத்தியிருக்கிறாள். கையகலம் பச்சைக் கரையில் கீற்றுசரிகை போட்ட யானைக் கருமை வண்ணப் பட்டுச் சேலை. வெள்ளை ரவிக்கை இறுகப் பிடித்தாற்போல் உடலோடு ஓட்டப் பதிந்திருக்கிறது. கழுத்தில் கெட்டியான திருநீற்றுப் பட்டைச் சங்கிலியும் பவளமாலையும் அணிந்தி ருக்கிறாள். வெற்றிலைச் சிவப்பு மறாத வாய். நெற்றி கொள்ளாத திருநீறு, அவள் கட்டுக் கழுத்தி அல்ல என்று விள்ளுகிறது. கூந்தலை இருபக்கங்களிலிருந்தும் சீராகப் பகிர்ந்து செருகிக் கொண்டிருக்கிறாள். ஒரு இழை நரைக்கவில்லை.

“வா தம்பி, நேத்துத்தான் சொல்லிட்டிருந்தேன். நாளைக்குக் கூட்டம்னு சொல்லிட்டுவந்து கோயமுத்தூர் பையன் விசாரிச்சிட்டுப் போச்சி. காலையிலே வரும்னு சொன்னேன். வா, தம்பி தனராசு...” என்று வரவேற்றவள் மைத்ரேயியைப் பார்த்துச் சிரிக்கிறாள்.

“தெரியுமில்ல? தம்பி...” என்று கண்ணபிரான் குறிப்பாகக் கூறிப் புன்னகை செய்ய, தனராஜ் உடனே, “கும்பிடறேன் அத்தை...” என்று அவள் கால்கள் தொட்டுப் பணிகிறான். மைத்ரேயி சில விநாடிகள் நின்றாலும் தானும் விழுந்து பணிகிறாள்.

“நல்லா இருக்கணும். ஏந்தம்பி? சொல்லாம கொள்ளாமயா கலியாணம் முடிக்கிறது? வாம்மா உள்ளே, உம் பேரென்ன?” என்று மைத்ரேயியை அவள் அழைக்கிறாள்.

“இவங்க அண்ணாச்சிக்குச் சின்னம்மா, எனக்குப் பெரியம்மா...” என்று தனராஜ் அறிமுகம் செய்து வைக்கிறான்.

“அது பேரென்னன்னு சொல்லவேண்டாமா?”

“மைத்ரேயி” என்று மைத்ரேயியே மொழிகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/38&oldid=1101041" இலிருந்து மீள்விக்கப்பட்டது