38
ரோஜா இதழ்கள்
"ராவெல்லாம் பிரயாணம் பண்ணிக் களைச்சிரிப்பே. எண்ணெய் மிளகாப்பொடி போடட்டுமா?”
“வாண்டாங்க, இது போதும்-”
“நேத்து எப்ப பொறப்பட்டீங்க. பட்டணத்திலேந்து?”
“எனக்கே முன்னப் பின்ன தெரியாது. திடீர்னு வந்து கிளம்புன்னாங்க-”
“அவங்க எப்பவும் இப்படித்தான். உனக்கு எந்த ஊர்ம்மா?”
“மாம்பாக்கம்-”அவள் தலை நிமிரவில்லை.
“தாய் தகப்பனெல்லாம் இருக்கிறார்களா?”
மைத்ரேயி குனிந்த தலை நிமிராமல் இல்லை என்று விள்ளுகிறாள்.
ஒரு பொட்டுக் கண்ணீர் இலையில் விழுகிறது.
“த்ஸ-த்ஸ-இலையிலே. பலகாரத்தை வச்சிட்டு வருத்தமான சங்கதியைக் கேக்குறேன். நானொரு மட்டி-”
“இல்லீங்க-” என்று மைத்ரேயி கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். “நான் பிறந்து நினைவு தெரிஞ்சதிலேந்து சாப்பிடுறியாம்மான்னு பரிவு காட்டுறவங்க நீங்கதான்னு நினச்சேன். கண்ணில் தண்ணி வந்திட்டது-”
“அடாடா- பாவம். ஏம்மா, சின்னப்பவே அவங்க இறந்திட்டாங்களா?” அனுதாபமும் பரிவும் ஒருவகையில் அவற்றுக்கு மூலமான உண்மையை மறைத்து, எதிராளியின் கவடற்ற உள்ளத்தைக் கொள்ளையடிக்கக் கூடியவை. மைத்ரேயி உடனே தன் துயர வரலாற்றைக் கொட்டத் தொடங்கிவிடுகிறாள்.
“நான் பிறந்தபோதே எங்கம்மா போயிட்டாங்க. எங்கையா ஒரு பெரிய வெள்ளைக்காரக் கம்பெனியில் மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற பதவியில் இருந்தாராம். எங்கப்பா நான் பிறக்குமுன்னமே இன்னொரு பெண்ணைக் கட்டி எல்லாம் அவளுக்கேன்னு வச்சிட்டு நாலைஞ்சு வருஷத்திலே செத்தும் போனார். எங்கக்கா தான் என்னை வளர்த்தது-"