பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதற்பதிப்பின் முன்னுரை

புதிய கதை எழுதவேண்டும் என்று, நான் ஓர் குறிப்பிட்ட பொருளைச் சார்ந்த செய்திகளை அறிவதற்காக வெவ்வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்திருக்கிறேன். வெவ்வேறு நிலைகளில் அதற்காகப் பல மனிதர்களைப் பரிச்சயம் செய்து கொண்டு செய்திகள் திரட்டி இருக்கிறேன். ஆதார பூர்வமான தகவல்களைப் பெற அந்தந்தப் பிராந்திய நூல் நிலையங்களுக்குச் சென்று கெஜட்டியர்களையும் பதிவேடுகளையும் மணிக்கணக்காகப் புரட்டிப் பார்த்திருக்கிறேன். இந்தப் புத்தகத்துக்காக நான் அத்தகைய முயற்சி எதையுமே மேற்கொள்ளத் தேவையிருக்கவில்லை. ஏனெனில் தமிழ்நாட்டின் அரசியல் சமுதாய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதோர் மாற்றம் நிகழ்ந்து வந்த ஏழெட்டு ஆண்டுக் காலப் பின்னணியில் இந்த நவீனம் உருவாயிருக்கிறது. புதிய அரசியல் சுதந்தரமும் மக்களாட்சி உரிமையும் பெற்ற நாட்டில் சுதந்தரத்துக்கு முன்பு நிலவிய ஒன்றுபட்ட சமுதாய ஒற்றுமையின் கண் இழைகளாகக் கருதப்பட்ட வேற்றுமைகளும் பூசல்களும் ஆழமான பிளவுகளாக வலுப்பெற்றதை யாரும் மறுக்க இயலாது.

பொதுவாக, பாரத நாட்டில் வருண பேதமும், மேற்குடிப் பிறப்பினன் தாழ்குடிப் பிறப்பினன் என்ற வேற்றுமையும் இருக்கும் வரையிலும் நாடு சிறந்த நாடாவதற்கு வழியில்லை என்பது நிலவி வரும் கருத்து. இந்து மதத்தைப் பொருத்தவரையிலும், ‘சிருஷ்டி’ அல்லது ‘ஆக்கல்’ என்ற நிலையே, பேதத்தைத் தோற்றுவிப்பது என்று கொள்ளற்பாலது. எல்லாம் ஒரே பாங்கை அடைவதும் அழித்தல் என்ற நிலையும் ஒன்று. எனவே, வேற்றுமை இயற்கை. வயதில் குழந்தை, இளைஞன், முதியவன் என்ற வேற்றுமையைப் போல், பாலில் ஆண்பால் பெண்பால் என்ற வேற்றுமையைப் போல், மனப் பக்குவத்திலும், அதற்கிணைய புரிகின்ற செயலிலும் உள்ள வேற்றுமையே வருண பேதமாகிறது.

எக்குடியிற் பிறந்தவன் என்பதை முன்னிட்டு ஒருவன் அந்தணன் என்பது உலக வழக்கு. ஆனால், மனப்பக்குவமும் வாழ்க்கை முறையுமே ஒருவனை அந்தணனென்று வேதாந்தம் வரையறுக்கிறது. எந்தச் சமுதாயத்திலும் எக்குடியிலும், எக்காலத்திலும் அந்தணன் தோன்றலாம். ஏனெனில் பிறப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/5&oldid=1101035" இலிருந்து மீள்விக்கப்பட்டது