பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

51


பகலில் விருந்து நேரத்தில் இரைபட்டுக் கருக்காத உருக்குத் தம்ளர்களில் ஒன்றைக்கூட அங்கு காணவில்லை. மொட்டையான பித்தளை டம்ளர் ஒன்றை எடுத்து நீர் முகர்ந்து வைத்துக் கொள்கிறாள்.

உண்மையில் மைத்ரேயிக்குக் குடல் காய்கிறது. அந்த கதம்ப உருண்டையைப் பிட்டு மெல்ல உண்ணத் தொடங்குகிறாள்.

அப்போது அம்மணியம்மாளே, கிண்ணத்திலிருந்து உருண்டை உருண்டையாக எடுத்துத் தானும் உண்கிறாள்.

அப்படிக் கிண்ணத்திலிருந்தும், தவலையிலிருந்தும் நேரடியாக எடுத்து உண்பது அவர்களுடைய ஆசாரத்தில் கண்டனத்திற்குரியது. சாப்பிடும் எச்சில் தட்டை, கொல்லைச் சுவர் ஆணையில்தான் மாட்டி வைக்கவேண்டும். அதைச் சாப்பிட வைத்துக் கொண்டால் கையைக் கழுவி விட்டுத்தான் சோற்றையோ குழம்பையோ தொடவேண்டும். அன்றன்று உண்ட கலங்களை வெறுமே கழுவினாலே எச்சில் போகாது என்று ஒரு ஆசாரமா என்று அக்காவின் கட்டுப் பாட்டுக்கு மைத்ரேயிக்கு கோபம் வரும். “நம் சாஸ்திரங்கள் எல்லாம் அப்படியே ஸயின்ஸ். ஒருத்தர் எச்சில் இன்னொருத் தருக்கு ஒட்டக் கூடாது. சாணி ஆண்டி செப்டிக். சாணி போட்டு சிமிட்டித்தரையில் எச்சில் துடைத்துவிட்டுப் பிறகு மறுசுருணை போட்டு சாணி அழுக்கு மாறத் துடைக்க வேண்டும்...” என்று விளக்கம் வேறு கொடுப்பாள். ஒவ்வொரு நோமும் எச்சிற் கலங்களெடுத்துச் சுத்தம் செய்வதற்குள் அவளுடைய பொறுமை கழன்று கழன்று நழுவத் துடிக்கும். இங்கு அம்மணியம்மாவுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

கட்டுப்பாட்டுக்கு அடங்கி அடங்கி அலுத்து ஒருநாள் மீறினால் என்ன என்று மீறி அந்தக் கட்டுப்பாடுகளைப் பொருளற்றுப் போகச் செய்யவேண்டிய அவசியமுமில்லை.

“என்ன பாக்குறே? இன்னும் கொஞ்சம் வய்க்கிட்டுமா? ரசம்... ரசம்கூட நல்லாயிருக்கும்” என்று ரசத்தை முகர்ந்து பார்த்து விட்டுக் கூறுகிறாள் அம்மணியம்மாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/53&oldid=1101053" இலிருந்து மீள்விக்கப்பட்டது