பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

53


“இல்லீங்க. அவங்கல்லாம் சாப்பிட்டுட்டே வந்திடுவாங் களோன்னு நினைச்சேன்...”

அம்மணியம்மாள் வாயைத் திறக்கவில்லை.

வெற்றிலை நரம்பைக் கிழிப்பதிலும் சுண்ணாம்பைத் தடவுவதிலுமே கவனமாக இருப்பதுபோல் பாவனை செய்கிறாள். ஏதோ யோசனை செய்கிறாள் போலிருக்கிறது.

“இரு, இந்தப் பய ரூம்பைக் கழுவிவிட்டுக் கதவைப் பூட்டுறானான்னு பாத்துவர்றேன்...” என்று எழுந்து செல்கிறாள்.

ஏதோ ஒரு மரும வலையைப் பின்னி விரித்திருப்பது போலிருக்கிறது. இடுப்புச்சாவி குலுங்க, சற்றைக்கெல்லாம் செம்பில் குடிநீருடன் அவள் வருகிறாள்.

தனக்கும் படுக்கையைப் போட்டுக்கொண்டு, அவளுக் கும் ஒரு பாயும் தலையணையும் கொடுக்கிறாள். “இங்கியே படுத்துக்க” மறுபடியும் அவங்க வரமாட்டாங்களா என்று கேட்க நா எழும்பினாலும் சொற்கள் எழவில்லை. ஆனால் கண்கள் கேட்கின்றன.

“ஏன், சும்மா, அப்டிப் பாக்கிறே?”

“ஒண்ணுமில்ல--”

“ஒண்ணுமில்லேன்னா? ஏம்மா? நல்ல உசந்த குலத்தில் பிறந்து கண்ணுக்கு லட்சணமா இருக்கிறே. ஒரு பெரியவங்க, பெருந்தலைங்கன்னு அடங்காம என்ன இதெல்லாம்?”

வெட்டவெளித்தனிமை என்றஞ்சிய பேதைக்குப் பாம்புக் குட்டி நெளிவதுபோல் நடுக்கம் மேலிடுகிறது.

என்னமோ படிச்சேன்னுறே. இப்படிவந்து கெடுத்துக் கிட்டியே! இவனுங்க வாயில பேசுவானுக, ஒழுக்கம்னும், கற்புன்னும் அதுண்ணும் இதுண்ணும். நான் உனக்கு இதுக்கு மேல விளக்கத் தேவையில்ல. நீ இங்கே இருந்து குடித்தனம் பண்ணிக் குப்பை கொட்டமுடியாது. வெத்து வேட்டு அளப்பானுக. எந்தச் சாக்கடையிலும் போய் விழுவானுக. இருளோடு ஆறுமணிக்குப் பெரிய வீதியிலே பஸ் போகும். ஈரோடு போயி வண்டியேறிக் குடும்பத்திலே போயி ஒட்டிக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/55&oldid=1099751" இலிருந்து மீள்விக்கப்பட்டது