பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

65

“என்ன பண்ணச் சொல்றேளோ, பண்றேன்!”

உடனே மதுரம், “நீ ஒண்ணும்பண்ணவேண்டாம்! அந்த அய்யாசாமியை கடைத்தெருபக்கம் பார்த்தியானா வர வேண்டிய காசை வாங்க வழிபாரு. டீ பொம்மி, இத்தைத் தூக்கிண்டு போ, நீ ஆத்துக்கு. நான் பின்னாலியே வரேன்...”

வெற்றிலை புகையிலை அடங்கிய பெருங்காயப் பெட்டியுடன் தொப்பை தெரியக் குட்டையாக எழுந்து நிற்கிறான் அந்தக் குடும்பத் தலைவன். தலையில் அழுக்குத்துண்டைப் போட்டுக் கொண்டு அவன் நடக்க முயலும் போதுதான் கால் சரியில்லை என்று புரிகிறது. குட்டையும் நெட்டையுமான கால்கள். உடல் சரிந்து சரிந்து அசைகிறது.

மைத்ரேயி அந்தக் குழந்தைச் செல்வங்களைப் பார்த்துக் கொண்டு நாவெழாமல் நிற்கிறாள்.

சில மாசங்கள் குடித்தனம் செய்த அநுபவம் அவளுக்கு இல்லாமல் இருந்த நாட்களில் தன் சிறுமைகளைத் தவிர வேறு நினைக்கத் தெரிந்திருக்கவில்லை அவளுக்கு. இப்போது அவள் புதிய மலர்ச்சி பெற்றாற்போல் சிந்திக்கிறாள்.

இந்த மதுரமும், சாய்கால் கணவனும் குழந்தைகளும் எப்படி நிரந்தர வருமானமில்லாமல் குடும்ப வண்டியை ஓட்டுவார்கள்? அன்றன்று ஆண்டவன் எங்கேனும் கைகாட்டுவான் என்ற நம்பிக்கையோ?

சீனுவின் தலைமேல் ஒரு சாக்கு மூட்டையை எடுத்து பைக்கிறாள் மதுரம். சாக்கு பளுவாக இருக்கும் போல் தோன்றுகிறது.

மதுரம், மைத்ரேயியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு “சருகெல்லாம் கூட்டினேனில்லையா? அதோடு கொஞ்சம் எரி மூட்டை கொண்டுவந்து இங்கே உணத்தியிருந்தேன். அங்கே வச்சா திருட்டுப் போயிடும். அத்தனையும் பரதைக் கும்பல்...” என்று அறிவித்துவிட்டு, “போங்க, போங்க...” என்று எல்லாரையும் விரட்டுகிறாள்.

சூணாவயிற்றுக் குழந்தை அவள் இடுப்பைவிட்டு இறங்க மாட்டேன் என்று முரண்டுகிறது.

ரோ.இ- 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/67&oldid=1101878" இலிருந்து மீள்விக்கப்பட்டது