பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ரோஜா இதழ்கள்

“போம்மா, அக்கா மிட்டாய் வாங்கித்தராடீ! ஆறு பை சாக்குத் தேங்காய்மிட்டாய் வாங்கிக்குடு..”

தேங்காய் மிட்டாய் காசிருந்தால்தான் கிடைக்கும் என்று அந்தப் பிஞ்சுக்கு அறிவு முற்றியிருக்கிறது. மதுரம் இடுப்பிலிருந்து ஓரணாச் சில்லறையை எடுத்துக் கொடுத்த பின்னரே அது அவள் இடுப்பைவிட்டு மாறுகிறது. அவர்கள் எல்லோரும் செல்கின்றனர்.

“மைத்தி உள்ளே வா, ஏன் அப்படியே நிக்கறே? உள்ளே வந்து சாமான் எதானும் எடுத்துக்கொடு. உப்புமா வேணாக் கிளருறேன். உன் கண்ணும் மூஞ்சியும் கெஞ்சறது. ரொம்ப தூரமோ பிரயாணம்?”

“இல்லே...”

“உக்காரேன்? நல்லவேளை, நீ வந்தே. என்னதான் ஆயிரம் மாமி நல்லவளாயிருந்தாலும், நான் பஞ்சம் பனாதை. இன்னிக்குப் பாலும் காப்பித்தூளும் வாங்கிண்டு இங்கேயே வந்துடுங்கோ. சமையல் ரூமைத் திறந்துதான் வச்சிட்டு மாமா சொல்லிட்டுப் போயிருக்கார்.... காப்பியை இங்கியே போட்டு அனுப்பறேன்னு சொல்லிருந்தேன், எல்லாம் ஓடி வந்துடுத்து.....” என்று எதற்கோ அஞ்சினாற்போல் நியாயம் பேசிக் கொள்கிறாள் மதுரம்.

“அதனாலென்ன மாமி, குழந்தைகள் அப்படித்தான் வரும்- அக்கா... உங்ககிட்ட... வேறொண்ணும், என்னைப் பத்திப் பேசினதில்லையா?”

மதுரம் மாமி சிரிக்கிறாள்.

“அப்படித்தானிருக்கும். இப்ப இது மாதிரி எங்கும் நடக்கிறதுதான். அவரும் இப்ப ஊருக்கு வந்திருக்காரா மைத்தி?”

மைத்ரேயியின் கண்கள் நிரம்புகின்றன.

“நான் விவரம் புரியாம குழியிலே விழப் போயிட்டேன் மாமி. நல்லவேளையாப் புரிஞ்சிண்டு ஓடிவந்துட்டேன் -- அக்காவும் அத்திம்பேரும் என்னைத் திரும்ப வீட்ல சேர்ப்பாளா மாமி?...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/68&oldid=1101881" இலிருந்து மீள்விக்கப்பட்டது