பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

67

மதுரம் மாமி ஒரு நிமிடம் பேசவில்லை.

“சேர்க்காம இருக்க நீ என்ன அவ்வளவு பெரிய தப்புபண்ணிட்டே? நீரடிச்சு நீர்விலகுமா? நீ குழந்தை மாதிரி அவாளுக்கு-மல்லாக்கப் படுத்துண்டு ஆகாசத்திலே துப்புவாளா?”

மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. “நிசமா எம்மேல கோபப்பட மாட்டாளா, மாமி?”

“கோபம் வரத்தான் வரும். ஆனா பாசம் இருக்காதா? என்னடாது இந்தப் பெண் ஜாதிவிட்டு ஜாதின்னு தவறிப் போய் சம்பந்தம் பண்ணிண்டுடுத்தேன்னு இருக்கத்தான் இருக்கும். அது எப்பவும் இருக்குமா?”

“மறுபடியும் என்னை அக்கா- அத்திம்பேர் கோபிச்சு விரட்டினால் வேறு வழியே இல்லே. இப்படியே எங்கயானும் ரயில் தண்டவாளம், குளம் குட்டைன்னு போக வேண்டியது தான்...”

“அசடு இப்படி எல்லாம் பேசாதே. உங்கக்காவுக்கும் அத்திம்பேருக்கும் பொன்னான மனசு. எத்தனை வருஷமாகவோ கூடாத பாக்கியம் கூடி இருக்கு. நல்லபடியாத் திரும்பி வரணும்...”

நல்லபடியாகத் திரும்பி வரவேண்டும். அக்காவை உடலசைக்கவிடாமல் தன் உடலைச் செருப்பாய் தைத்துச் சேவை செய்ய வேண்டும். அக்காவுக்கு இவ்வளவு நாட்கள் கழித்துப் பிறக்கப் போகும் குழந்தையைப் பொன்னின் மலரெனத் தூக்கிச் சீராட்டவேண்டும்...

தோட்டத்துக் கிணற்றில் ‘பம்ப்’ போடும்போது, தண்ணீர், யானை துதிக்கையால் பொழியுமளவுக்கு நீர் கொட்டி மடைவழி ஓடும். அங்கே கல்லில் அவள் துணி துவைத்துக் குளிப்பாள். மைத்ரேயிக்கு இப்போது அப்படிக் குளிக்க வேண்டும் போலிருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு முழுக்கு: அவனுக்கு; அவனோடு வாழ்ந்த வாழ்வுக்கு; அந்த நினைவுகளுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/69&oldid=1101883" இலிருந்து மீள்விக்கப்பட்டது