பக்கம்:வசந்த மல்லிகா.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11-வது அதிகாரம்

கிழவனும் கூத்தியும்

ம்புலாஞ்சோலையில் பீமராவைச் சந்தித்த பிறகு தனது சால்வையால் தன்னை நன்றாக மூடிக்கொண்டு நடந்த மல்லிகா அன்று பகல் முழுவதும் தண்ணீரும் அருந்தாமல் ஆகாரமென்பதையே முற்றிலும் மறந்தவளாய்ப் பைத்தியங் கொண்டவளைப் போல அங்குமிங்கும் அலைந்து திரிந்தாள். அவள் சென்றவிட மெல்லாம் வஸந்தராவின் வடிவத்தையன்றி வேறெதையும் காணாதவளாய் தான் இனி என்ன செய்வதென்பதையறியாதவளாய்த் தடுமாறி அலைந்தாள். பொழுதேற ஏற, மாந்தளிர் போன்ற அவளது மெல்லிய மேனி தளர்வடைந்தது, கால்களும் சோர்ந்து நோகவாரம்பித்தன. அப்போதைக்கப்போது ஆங்காங்கு காணப்பட்ட மரங்களின் நிழலில் அவள் சிறிது உட்கார்ந்து கொள்வாள்; ஆனால் சிறிது நேரத்திற்கு மேல் உட்கார்ந்திருக்க ஸகியாதவளாய் சடக்கென்று எழுந்து மேலும் நடப்பாள். அங்ஙனம் அன்று மாலை ஆறரை மணி நேரம் வரையில் ஒய்வின்றியும் உணர்வின்றியும் நடந்து நடந்து மெய்யும் மனமும் புண்பட வாடித் துவண்டு வருந்தினாள். சோகமும் களைப்பும் தோன்றி மேலிட்டன. கண்கள் இருண்டன. மேலும் ஓர் அடி எடுத்து வைக்கும் வல்லமையற்ற நிலைமையில் அவள் ஆற்றின் படித்துறைக்கு வந்து சேர்ந்தாள்.

ஆறு நிறைய தெளிந்த பிரவாகம் சென்று கொண்டிருந்தது. மாலை வெயிலின் சென்னிறமும், படித்துறையின் தோற்றமும், ஆற்றின் இருபுறங்களிலுமிருந்த தென்னை, கமுகு, வாழை முதலிய தருக்களின் காட்சியும், தெளிந்த நீரின் சலசலவென்ற போக்கும் மிக்க இரமணியமாக இருந்தமையால், அவை காண்போர் மனத்தையும் கண்களையும் கவர்ந்தன. மலர்களினின்று ஒழுகிய தேனைப் பருகிய வண்ணம் கோடாதுகோடி வண்டுகள் ரீங்காரம் செய்து வம்புலாஞ்சோலையென்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/105&oldid=1231403" இலிருந்து மீள்விக்கப்பட்டது