பக்கம்:வசந்த மல்லிகா.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

வஸந்தமல்லிகா

நிரம்பவும் தந்திரமாக மல்லிகாவைப் பற்றி அதிகமாக ஒன்றும் பேசாமல் சம்பாஷணையை வேறு விஷயத்தில் பீமராவ் திருப்பினான். அவ்விதம் உரையாடியவண்ணம் அவர்கள் மூவரும் கருந்தட்டாங்குடிக்கு வந்து சேர்ந்தனர்.

"இதுதான் எங்களுடைய தெருவு. இனிமேல் நாங்களே போய்விடுகிறோம். நீர் இன்னும் சிரமப்பட வேண்டாம். நீர் செய்த உதவிக்கு நாங்கள் என்ன பதில் உதவி செய்யப் போகிறோம். ஏன் ஸஞ்சலாட்சி! நீ சொல்" என்றாள் கிருஷ்ணவேணி.

"ஆம் உண்மைதான்!” என்ற மெதுவாக மறுமொழி சொன்னாள் மல்லிகா.

"இவ்வளவு தூரம் நான் வந்தும், உங்களை வீட்டில் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்காமல் போவது பிசகு" என்று சந்தோஷமாகத் தெரிவித்தான் பீமராவ்.

அதன் பிறகு இரண்டொரு நிமிஷத்தில் அவர்கள் மூவரும் கிருஷ்ணவேணியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அது அவர்கள் முன்னிருந்த சிறிய வீடல்ல. மல்லிகா வந்த பிறகு அதில் இடம் போதவில்லையென்று அவர்கள் வேறொரு சிறிய மெத்தை வீட்டிற்கு மாற்றிக் கொண்டார்கள். கிருஷ்ணவேணி கதவை இடித்தவுடன், வேலைக்காரக் கிழவி வந்து கதவைத் திறந்து விட, இரண்டு மங்கையரும் கூடத்திற்குப் போயினர். அங்கு ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. கிருஷ்ணவேணியின் தந்தை ஒரு சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டு வேறொரு நாற்காலியில் தனது கால்களை நீட்டிய வண்ணம், "அம்மா' 'அப்பா' என்று அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். அதைக் கண்ட கிருஷ்ணவேணி நிரம்பவும் பதைபதைத்தவளாய், “என்ன சங்கதி?” என்று கேட்டுக்கொண்டே கிழவனுக்கருகில் விரைவாகச் சென்றாள்.

"கிழவனுக்கு விசேஷமொன்றுமில்லை. உங்களை அழைத்துக் கொண்டு வரப் புறப்பட்டு மெத்தையிலிருந்து கீழே இறங்கினேன். கால் வழுக்கிக் கீழே விழுந்தேன்" என்றான்.

"ஐயையோ கால் போய்விட்டதா?" என்று சொல்லிய வண்ணம் ஆவலோடு சென்று காலிற்கருகில் உட்கார்ந்து அதை உற்று நோக்கினாள் கிருஷ்ணவேணி. "இல்லை இல்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/138&oldid=1232137" இலிருந்து மீள்விக்கப்பட்டது