பக்கம்:வசந்த மல்லிகா.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

வஸந்தமல்லிகா

பீம : இல்லை ; ஏன்? அதற்கென்ன?

தம : (மல்லிகாவை நோக்கி) அதிருக்கட்டும். உங்களிருவ ருக்கும் எவ்வளவு காலமாகப் பழக்கம்? நாடகத்தில் நீ சேர்ந்த பிறகுதானே?

மல்லி : ஆமாம்.

தம : உன்னுடைய முந்திய வரலாறுகளை இவருக்குத் தெரிவித்தாயா?

மல்லி : (மாறுபட்ட முகத்தோடு) ஏன்?

தம : காரணத்தைப் பிறகு தெரிவிக்கிறேன். உன்னுடைய நன்மையைக் கோரியே கேட்கிறேன். யோசனை செய்யாமல் சொல்.

மல்லி : என்னுடைய வரலாற்றைச் சொல்லவில்லை.

தம : (பீமராவை நோக்கி) உமக்கு ஒன்றும் தெரியாதா?

பீம : தெரியாது. (ஆத்திரத்தோடு) தமயந்தி, ஏன் இப்படி உபத்திரவிக்கிறாய். இந்தக் கேள்வியெல்லாம் எதற்காக? வந்த காரியத்தைப் பளிச்சென்று சொல்.

தம : நான் உம்மை ஒன்றும் உபத்திரவிக்கவில்லை . நான் மல்லிகாவைக் கேட்கிறேன். அவள் பதில் சொல்லுகிறாள். உமக்கு வருத்தமென்ன? மல்லிகா! நாளைக்கு இவரைக் கலியாணஞ் செய்து கொள்ள உனக்குப் பிரியந்தானா? என்றாள்.

மல்லிகா மறுமொழி சொல்ல அறியாமல் மௌனமாக நின்றாள்.

பீம : (ஆத்திரத்தோடு) அடி தமயந்தி! அழைக்காத இடத்தில் அநாவசியமாக வந்து ஏன் இப்படித் தாறுமாறாகப் பேசுகிறாய்? போதும்; புறப்பட்டுப் போ.

தம : (பரிகாசமாக) ஐயா! இதோ போய்விடுகிறேன். கவலைப்படாதேயும். ஏது? நீர் இந்த வீட்டுக்குக் கூட எஜமான் ஆய்விட்டீரோ?

கிருஷ்ணவேணியின் அனுமதியின் பேரில் நான் வந்திருக்கிறேன். அவள் போகச் சொன்னால் உடனே போய்விடுகிறேன். நீர் ஏன் வீணாக அவஸ்தைப்படுகிறீர்? பேசாமல் இரும் - என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/234&oldid=1234021" இலிருந்து மீள்விக்கப்பட்டது