பக்கம்:வசந்த மல்லிகா.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

வஸந்தமல்லிகா

உடனே அந்த வேலைக்காரி உள்ளே போய் அவ்வாறு மல்லிகாவிடத்தில் தெரிவித்தாள். அதைக்கேட்ட மல்லிகா தனிமையிலிருக்கும் ஸ்திரீயான தன்னோடு அவர் பேச விரும்பியதைப்பற்றி நிரம்பவும் கோபமடைந்தாளேனும், அதைக் காட்ட மாட்டாமல் அடக்கிக் கொண்டு தான் பேச முடியாதென்று சொல்லியனுப்பினால், அவர் யாரோ ஒரு ஜெமீந்தாராதலால் அவரது சிநேகிதரான வஸந்தராவுக்கு தன்மீது வருத்தம் உண்டாகுமென்று நினைத்து அரைமனதோடு அவரை அழைத்து வரும்படி சொல்லியனுப்பினாள்.

அடுத்த நிமிஷம் மோகனராவ் உள்ளே நுழைந்தார். அவரைக் கண்டு நிரம்பவும் நாணங்கொண்ட மல்லிகா கீழே குனிந்த வண்ணம் ஒரு மூலையில் நின்றாள். அங்கே கிடந்த நாற்காலி யொன்றில் மோகனராவ் உட்கார்ந்துகொண்டு, புன்சிரிப்புடன், "நீங்கள் இங்கே வந்திருப்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். பெட்டி வண்டியிலே போன உன்னுடைய புருஷரைக் கூவியழைத்தேன்; அது அவருடைய காதில் படவில்லை. அதற்குள் வண்டியும் போய்விட்டது. அவர் என்னுடைய பள்ளிக் கூடத்து சிநேகிதர், நாங்களிருவரும் பூனாவில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர் என்னைப் பற்றித் தெரிவித்திருப்பாரே! நான் கலியாணபுரம் ஜெமீந்தார். என்னுடைய பெயர் மோகனராவ்!” எனறாா. "அப்படியா! நிரம்ப சந்தோஷம். அவர்கள் கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து விடுவார்கள். தாங்கள் இங்கே இருக்கும் இடம் எதுவோ?" என்றாள் மல்லிகா.

"நான் அடுத்த வீட்டில் இறங்கியிருக்கிறேன்; நான் ஊரிலிருந்து இங்கே வந்து ஒரு வாரமாகிறது. என்னுடைய ஜெமீன் மாளிகையெல்லாம் இந்த ஊரிலிருந்து ஆறு மைலுக்கு வடக்கே இருக்கின்றன. நான் அடிக்கடி இந்த ஊரில் வந்து தங்குவது வழக்கம். ஆனால், எவ்வளவோ பெருத்த சீமானாகிய உன்னுடைய புருஷர் வஸந்தராவ் தமது சொந்த மாளிகையை விட்டு கேவலமான இந்த இடத்தில் வந்திறங்கினதே எனக் அதிசயமாக இருக்கிறது" என்றார் ஜெமீந்தார்.

வஸந்தராவ் தன்னை மாதவராவ் என்று சொல்லும்படி தெரிவித்தது மல்லிகாவின் நினைவிற்கு வர அவள், "என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/86&oldid=1231207" இலிருந்து மீள்விக்கப்பட்டது