பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வனதேவியின் மைந்தர்கள்

அவந்திகா ஒர் இலையால் மூடப்பெற்ற அந்தப் பொற் கிண்ணத்தைக் கையில் வாங்கி முகர்ந்து பார்க்கிறாள். இந்தப் பூமகள், மதுவின் வாசனையே துகராதவள். புலால் உணவை வெறுக்கும் பூதேவி இவள். இவளுக்கு உணவு தயாரிக்கவே இங்கே சிறப்பாக அநுபவம் பெற்ற ஊழியப் பெண்கள் இருக்கிறார்கள். கேகயகுமாரியான ராணி மாதாவின் மீது அவந்திகாவுக்கு அளவு கடந்த நம்பிக்கையும் பரிவும் அன்பும் உண்டு. இந்தப் பானத்தில், இஞ்சியும் புளிப்பும் தேனும் கலந்திருப்பதை இரண்டு துளிகள் கையில் விட்டுச் சுவைத்தபின் கண்டு கொள்கிறாள்.

“தேவி! ராணிமாதா சகல கலைகளிலும் வல்லவர். பதினான்கு ஆண்டுகள் தாங்கள் கானகத்தில் இருந்த காலத்து மன்னர் வர்க்கத்தினரால் கசக்கி எறியப்பட்டு அந்தப்புர அறைகளில் சிறையிருந்த அத்தனை பெண்களுக்கும் வெளிச்சமும் வாழ்வும் கொடுக்க எத்தனை கலைகள் பயிற்றுவித்தார்!... இது கரும்புச்சாறும், இஞ்சியும் புளிப்புக்கனியும் சிறிது தேனும் கூட்டிய பானம் சிறிது அருந்துங்கள். பசி எடுக்கும்.”

பூமகள் கிண்ணத்தை வாங்கி பானத்தை அருந்துகிறாள்.

உண்மையாகவே நாவுக்கு ஆரோக்யமான ருசி... புளிப்பும் இஞ்சிச்சுவையும், இனிப்பும்... மந்தித்துப் போன நாவில் நீர்கரக்கும் நயமும்.

இளைய ராணி மாதாவுக்குத்தான் எத்துணை அன்பான இதயம்? கல்லைப் போல் ஊரார் பழியையும் உலகோர் சாபங்களையும் மட்டும் வாங்கிக் கொள்ளவில்லை; பெற்ற மகனாலேயே த்து ஒதுக்கப்பட்ட அபாக்கியவதி. இதை நினைக்கும் போது கண்கள் பனிக்கின்றன.

“தேவி, குழந்தாய், இஞ்சிச்சுவை காரமாக இருக்கிறதா?...

அவளுடைய மென்துகில் கொண்டு கலங்கிய விழிகளை ஒத்துகிறாள் அவந்திகா. தன் உணர்ச்சிகளை விழுங்கிக் கொள்ளும் முகமாகக் கண்களைச் சிறிது மூடிக் கொள்கிறாள்.

உணவு கொண்டபின் மற்ற பணிப்பெண்கள் சுத்தம் செய்துவிட்டு அகல்கின்றனர்.