பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வனதேவியின் மைந்தர்கள்

கூவிடுவாய் - பூங்குயிலே...
கூவிடுவாய் - கூவிடுவாய்
தேன்சுனையில் திளைத்தனையோ,
தீயின் வெம்மை சகித்தனையோ!
வானுலகின் இனிமையெல்லாம்
வாரி வாரிப் பருகினையோ?

கூவிடுவாய்... பூங்குயிலே!
கூவிடுவாய்!
அன்புக்கடல் கடைந்து வந்த
அமுதம் நிரப்பி வந்தனையோ?
என்புருகும் சோகமெல்லாம்
இழைத்து ஒலி நீட்டுவையோ?

எங்கோ ஒர் உலகுக்கு அந்தச் சோகம் அவளைக் கொண்டு செல்கிறது. கண்களை மெள்ள விரித்துப் பார்க்கிறாள். யார் யாழிசைத்துப் பாடுகிறார்கள்?

யாருமில்லை. திரைச்சீலைகள் வெளி உலகை மறைக்கும் வண்ணம் இழுத்து விடப்பட்டிருக்கின்றன...

அவள் கண்களை உள்ளங்கைகளால் ஒத்திக் கொண்டு மீண்டு பார்க்கிறாள். கட்டிலைச் சுற்றிய திரைச்சீலைகளை ஒதுக்குகிறாள்.

மாடத்தில் ஒர் அகல் விளக்கு எரிகிறது.

அவள் அருந்திய கனிச்சாறு கீழே சிந்திய இடத்தில் எறும்புகள் தெரிகின்றன.

சிறை மீட்டு மகாராணியாகக் கொண்டு வந்து இங்கே சிறைப்படுத்திவிட்டார் போன்று மனம் ஏன் பேதலிக்கிறது?

இவளுக்கு இப்போது என்ன குறை? மன்னரின் மீது இவளுக்கு அவநம்பிக்கையா? ஏதோ ஒர் உண்மை சிக்கென்று பிடிபட எட்டாமல் வழுவிப் போவதுபோல் தோன்றுகிறது.