பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

47

கொண்டு செல்கிறார்கள். பிறகு அது கானகப்பாதையில் சென்று பரவிவிடும்.

முதுவேனில் பருவத்தில், இங்கே ஊற்றே இருக்காது. இந்தப் பூமகள் நீராட பூமிதேவி, நீராட்டிவிடுகிறாள்.

முழங்கால் அளவே ஆழம் அடியில் சுட்ட செங்கல் பாவிய தளம். கழுத்து வரை அமிழ்ந்து கொள்கிறாள். நீர் மேல் கூந்தலைப் பரவவிடுகிறாள்.

வயிற்றில் சிசுவின் சலனம்,... அவள் மேனியில் சுகமான ஒர் அனுபவத்தைப் பரவ விடுகிறது.

“தாயே? உனக்கும் நான் வயிற்றில் இருக்கும் போது இப்படி உணர்ந்தாயா? நீ என்னைப் பூமியில் விடும்போது, உனக்குச் சோகமாக இல்லையா? அந்தச் சோகங்களே மீண்டும் என்னுருவில் உயிர்க்கின்றனவோ?”

இதமான வெம்மையில் மின்னல்கள் போல் கதிர்கள்....

ஒரு கால் அவந்திகாவே என் அன்னையோ? அவள் மார்பில் பாலருந்த விதி எப்படி விட்டது?

நரைத்த முடியை உச்சியில் சுற்றிக் கொண்டு நந்த பிரும்மசாரியுடன் வரும் பெரியன்னை. ஒற்றை ஆடையை மார்புக்கு மேலும் முழங்காலோடும் சுற்றிக்கொண்டு வருவாளே, கால்களில் முரட்டுத் தோல் செருப்பு அணிந்து இலைப் பொதிகளில் அவளுக்குப் பரிசில் கொண்டுவருவாளே, அந்த முதியவள் யார்?

வேடுவர்கள் தயாரித்த கொம்புச்சீப்பினால் அவள் அடர்ந்த முடியை வாருவாள். காட்டுப்பூக்களை விதம்விதமாகத் தொகுத்து இணைத்து மலர்க்கிரீடம் சூட்டி, கன்னத்தை வழித்து திருஷ்டிகழிப்பாள். முத்தமிடுவாள். சில நாட்களில் ஊர்மி, கதா, பணிப்பெண் தோழிகள் எல்லோருடனும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது, அவள் வருவாள் இவளை மட்டும் அனைத்து முத்தமிடுவாள். முத்துச்சிவப்புப்