பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

59


“அதைப் பற்றி நானும் கேட்டேன். எங்கள் மூதாதையர் ஒரு பெண்ணை விரும்பினாராம். அவர் இந்த மரத்தடியில்தான் அவளைச் சந்திப்பாராம். மகிழ்ந்திருப்பாராம். அவள் கருவுற்று மகப்பேறு பெறாமல் இறந்து போனாளாம். அவள் பெயர் செண்பகவல்லி. அதனால் அவள் பெயரை இந்தத் தோட்டத்துக்கு வைத்து, மேற்கே செண்பக மலர்கள் சொரியும் மரங்களை நட்டாராம்....”

“அப்படியானால், இந்த மரத்தடியில்...” என்று சொல்ல வருபவள் நாவைக் கடித்துக் கொள்கிறாள்.

மன்னர் அவள் கையை அழுத்தமாகப் பற்றுகிறார்.

“பிரியமானவளே, நாம் எப்போதும் போல் அன்னப் பொய்கைக்குப் போவோம். வட்ட வடிவப் படிகளில் அமர்ந்து பறவைகளைப் பார்ப்போம்...”

அவர்கள் அங்கே வந்து, சுத்தம் செய்து விரிப்புகள் போடப்பட்ட இருக்கைப் படிகளில் அமர்ந்து கொள்கின்றனர்.

இதமான மஞ்சள் வெயில் அவர்களுக்குப் பொன்பட்டுப் போர்த்துகிறது.

வெள்ளை அன்னங்கள் உலவும் அழகைப் பார்த்துக் கொண்டே மன்னர் அவள் கரத்தைத் தன் மடியில் வைத்து, அந்தத் தொட்டுணர்வை அநுபவித்தவாறே, “பிரியமானவளே, உன்னை நான் மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். என் கடமையை நான் மறக்கவில்லை. இந்த வம்சத்தின் கொடியை நீ உன்னுள் தாங்குகிறாய். உனக்கு எந்த ஆசை இருந்தாலும் அதை நான் நிறைவேற்ற வேண்டும். அன்புக்கினியவளே, காம ரூபத்தில் இருந்து வந்த பட்டு வணிகர்கள் கொண்டு வந்த ஆடைகள் மிக நன்றாக இருந்தன. அன்னையிடம் அனுப்பி உனக்குச் சேர்க்கச் சொன்னேன். உனக்குப் பிடித்ததா?” என்று கேட்கிறார்.

“உம்...” என்று முத்துதிர்க்கிறாள்.

மனசுக்குள், இங்கும் நேர்முகப் பரிமாறல் இல்லையா என்ற வினா உயிர்க்கிறது. ஒரு தம்பி, ஒரு வானரன், ஒரு வேடன்...