பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வனதேவியின் மைந்தர்கள்

எடுத்து மேலே போட, அதன் இணை இலாகவமாக அதைப் பற்றிக் கொள்கிறது.

மன்னர் கலகலவென்று சிரிக்கிறார்.

பெண் அன்னம் முன்னே செல்ல, ஆண் தன் சிறகுகளை மெல்ல நீரில் அடித்தாற் போல் அதனுடன் உரசிக் கொண்டு சல்லாபம் செய்கிறது. பெண் குபுக்கென்று நீரில் மூழ்கிச் சிறிது அப்பால் செல்கிறது. மீண்டும் மன்னர் ஒரு பாலடைத்துண்டை துக்கிப் போட, ஒரு மீன் எழும்பி அது ஒரு வெண் பறவைக்குப் பலியாகிறது.

“... இது என்ன உயிர் விளையாட்டு? பாவம்!”

“... நீ பேச வேண்டும் என்றுதான் சீண்டினேன். தேவிக்கு என்மீது மிகவும் அதிகமான கோபம் என்று தெரிகிறது. நான் என்ன செய்யட்டும்? மீண்டும் நான் நாட்டைவிட்டு உன்னுடன் வரவேண்டுமானால், என்னை விட மாட்டார்களே?...”

“ஏன் இப்படி உயிர்க் கொலை செய்ய வேண்டும் பாலடையைக் காட்டி?”

“அம்மம்ம... நான் அந்த அன்னத்துக்கு உணவல்லவோ அளித்தேன்? சரி, பிரியமானவளே, என்னைத் தண்டித்துவிடு!” என்று அவள் செவிகளோடு கூறி அவளைத் தன் மார்பில் இழுத்துச் சாத்திக் கொள்கிறார்.அவள் நாணமுற்ற முகத்தை அந்த மார்பில் பதித்துக் கொள்கிறாள். மன்னரின் நெஞ்சத்துடிப்பை அவளால் உணர முடிகிறது.

“அன்புக்கினியாளே, எனக்கு எப்போதும் உன் நினைவுதான். நான் விழித்திருக்கும்போதும், உறங்கும்போதும், அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் போதும், இந்தத்துடிப்பு, உன் பெயரையே உட்கொண்டு சுவாசிக்கிறது. தேவி, கேள்!...”

“அப்படியானால், அன்று உனக்காக நான் அரக்கரை வெல்லக் கடல் கடந்து வரவில்லை என்று சொன்னதெல்லாம்...”

வார்த்தைகள் குத்திட்டு நிற்கின்றன.