பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

63


ஆனால் அவர் அந்தச் சொற்களால் அவள் இதயத்தைச் சுட்டு அக்கினி குண்டத்தில் இறக்கினாலும், அவள் அவர் இதயம் நோகும்படியான சொல்லம்புகளை வெளியாக்க மாட்டாள்.

அவளை வளர்ந்த தந்தை கூறினாரே! “மகளே!... தந்தை தாய் தெரியாமல் என் கையில் வந்த உன் அழகுக்கும் குணத்துக்கும் பண்பு நலங்களுக்கும் மேன்மையுடன் உன்னை ஏற்றிப் போற்றிக் காப்பாற்றக்கூடிய அரச குமாரனை எப்படித் தேடுவேன் என்று கவலை கொண்டேன். ஆனால் சில விநாடிகளில் அந்தப் பெருங்கவலையைத் தீர்த்து வைத்தாய். வில்லின் கீழ் புகுந்த பறவைக்குஞ்சு வெளியே பறந்து வர இயலாமல் தவித்தபோது, அநாயாசமாக அதை உன் கருணைக் கரத்தால் துாக்கி, விடுவித்தாய். அந்த வில்லை எடுத்து நானேற்றுபவனே உனக்கு மணாளன் என்று தீர்மானித்தேன். விசுவாமித்திர மகரிஷி பையன்களைக் கூட்டிவந்தார்.சொந்தமகள், வளர்ப்புமகள், தம்பி மக்கள் - எல்லோருக்குமே மனமாலை நாள் கூடிவிட்டது. தாய் - தந்தை குலம் கோத்திரம் தெரியாத உன்னை அயோத்தி மன்னர் ஏற்றுக் கொண்டதே பெருமைக்குரிய செயல். இனி அவர் - உன் மணாளனே, தாய், தந்தை, குரு, தெய்வம் எல்லாமுமாகிறார். அவர் இருக்குமிடமே உனக்கு மேலான இடம்...” என்று மொழிந்த உரைகள்...

எல்லாம் இவரே. இவர் உடமை, அவள். உடமைப்பொருள். இப்போது அவள் வயிற்றில் உருவாகியிருக்கும் உயிரும் அவர் உடமை. அவள் நெற்றியை மெல்ல வருடிக் கொண்டு அவர், “பிரியே, உன் முகம் ஏன் வாட்டமுற்றிருக்கிறது?... உடல் நலமில்லையா?” என்று கேட்கிறார்.

அவள் எதைச் சொல்வாள்?

“இல்லையே?”

“உன்னைக் காண ஒரு முனி வந்திருந்தாராமே?...”

அவள் விருட்டென்று தலை துக்குகிறாள்.

“சுவாமி, அவரைத் தாங்கள் பார்த்தீர்களா?”