58
‘வாழையடி வாழை’
ஒருவர் மதித்து நடக்கின்றாரோ அவரே இன்பமடைவர் என்னும் உண்மையினை,
'கால நதியின் கதியதனில்
கடவுள் ஆணை காண்பீரேல்
ஞாலமீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!'
என்னும் கவிதை புலப்படுத்துகிறது.
பெண்ணின் பெருமையினைப் பேசாத கவிஞர் இலர். பெண்மைக்கு அவர் தரும் மதிப்பே அவர்தம் கவிதைப் படைப்புகளுக்கு உரமூட்டுகிறது. பெண்ணினைப் போற்றுவது பண்பினை—அன்பினை—தாய்மையினை மென்மையினைப் போற்றுவதாகும். இதனை நன்குணர்ந்தவர் கவிமணி. உடலும் உள்ளமும் மென்மை நிறைந்த அவர் பெண்மையினைப் பின் வருமாறு போற்றி புகழ்ந்துள்ளார்:
மங்கைய ராகப் பிறப்பதற்கே—நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா!
பங்கயக் கைநலம் பார்த்தலவோ—இந்தப்
பாரில் அறங்கள் வளரும் அம்மா!’
உள்ளத்திற்கு உறுதியான பண்பாடுகளை வலியுறுத்தி வந்த கவிஞர், உடல் நலம் பேணலையும் வற்புறுத்தியுள்ளார். 'உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்' என்றும், 'தூய காற்றும் நன்னீரும், சுண்டப் பசித்த பின் உணவும் நோயை ஓட்டி நூறு வயதுவரை வாழவைக்கும்'. என்றும் குறிப்பிடுகின்றார் கவிஞர்.
பொதுவுடைமைத் தத்துவம் புகழ் பூத்து நிற்கும் நேரமிது. பொதுவுடைமைப் பூங்காவாக நாடு பூத்துக் குலுங்கிப் பொலிவு பெறவேண்டும் என்று எண்ணுவோர் எண்ணிக்கை மிகுதி. தொழிலாளியின் முறையீடாகக் கவிஞர் அவர்கள்,