பாவேந்தர் பாரதிதாசனார் 69
தென்றலைப் பற்றிப் பெருமிதத்தோடு கவிஞர் பேசுகின்றார்: 'தென்னாட்டுப் பொதுமக்களின் தனிச் சொத்துத் தென்றல்’ என்கிறார்.
'தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே உன் இன்பத்தைத்
தென்னாட்டுக் கல்லால் வேறே எந்நாட்டில் தெரியச் செய்தாய்?
—அழகின் சிரிப்பு: தென்றல்: 3
அடுத்து எழில் பெற்ற குன்றத்தினை ஏற்றமுற வருணிக்கும் கவிஞர் கைவண்ணத்தினைக் கீழே காண்க:
நீலமுக் காட்டுக் காரி நிலாப்பெண்ணாள், வற்றக் காய்ந்த
பாலிலே உறைமோர் ஊற்றிப் பருமத்தால் கடைந்து பானை
மேலுற்ற வெண்ணெய் அள்ளிக் குன்றின்மேல் வீசி விட்டாள்!
ஏலுமட் டுந்தோ ழாநீ எடுத்துண்பாய் எழிலை எல்லாம்!’
—அழகின் சிரிப்பு: குன்றம்: 9
எழிலை எடுத்துண்பதற்கு எல்லாரையும் கவிஞர் 'சேர வாரும் செகத்திரே' என்று தாயுமானவர் குரலிலே விளிக்கின்றார்.
ஆற்று வெள்ளத்தில் ஆதவன் ஒளி உமிழ்கின்றான். இது நாம் காணும் காட்சிதான். ஆயினும், கவிஞரின் கண்ணிற்பட்டு விட்ட அக்காட்சி கவினுற விரிகிறது, கவிஞரின் மணம் கமழும் பாடலாக:
'இருகரை ததும்பும் வெள்ள நெளிவினில் எறியும் தங்கச்
சரிவுகள்! துறையோ முத்துத் தடுக்குகள்! சுழன்மீன் கொத்தி