பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னால் குறிப்பிட்ட மன அழுங்கு நோயாக இருந்தால், இந்தச் சிகிச்சை பலன் அளித்திருக்காது.

ஓரிரண்டு இளைஞர்களை, மனநோய் மருத்துவர்களிடம் நான் அழைத்துச் சென்றிருக்கிறேன். மனநோய் மருத்துவர்களோ மணிக் கணக்கில் காத்திருக்கும் இந்த நோயாளிகளிடம் நிமிடக் கணக்கில் பேசிவிட்டு, மாத்திரையை எழுதிக் கொடுத்து விடுகிறார்கள். இந்த மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றியும், இவர்கள், இந்த வகை நோயாளிகளுக்கோ அல்லது உடன் செல்கிறவர்களுக்கோ எடுத்துக் கூறுவதில்லை. இப்படிப்பட்ட மனநோய் வருவதற்குரிய காரண காரியங்கள் பற்றியோ கூடப் போகிறவர்களிடமும் சொல்வதில்லை. மனநோயாளிகளின் எண்ணிக்கைப் பெருக்கமும் அவசர அவசரமாக பணம் பண்ணும் குறிக்கோளுமே பெரும்பாலான மனநல மருத்துவர்களுக்கு லட்சியமாகி, அந்த லட்சியமே மருத்துவ வியாபாரமாகி விட்டது.

ஒருவருக்கு மனநோய் என்பது, உடல் அளவாலும், மனோ ரீதியிலும் ஏற்படலாம். முதலில் உடல் அளவில் ஏற்பட்டிருக்கிறதா என்பதற்கு மூளை சம்பந்தப்பட்ட பாகங்களை "எக்ஸ்ரே" எடுப்பதும், "ஸ்கேன்" செய்வதும் மிகவும் முக்கியமானது. மூளையின் நரம்புகளோ செல்களோ பாதிக்கப்பட்டிருந்தால், மனநோய் மருந்து பயன்படாது. இதைப் பற்றி மனநோய் மருத்துவர்கள் கவலைப் படாததால்தான், பல நோயாளிகள் சாகும் வரைக்கும் அல்லது பல ஆண்டுகளுக்கு மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மாத்திரைகளை விடாப்பிடியாக விழுங்குகிறார்கள். இதனால் நோயின் தாக்குதல் தணிகிறதே தவிர, நோய் தீருவதில்லை. பெளதீக ரீதியில் மூளை எப்படி இருக்கிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டுமென்ற அடிப்படை உண்மை, நமது மனநல மருத்துவர்களுக்கு தோன்றாமல் இருப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. வியாபாரம் என்று வந்தால் இப்படித்தான் போலும்.

இந்தவகை மருத்துவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர் டாக்டர். எம். திருநாவுக்கரசு. இவரைப்போல் சில மருத்துவர்கள் இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரியாது. எந்த மனநோயாளியையும் முதலில் அவரது மூளையில் குறைபாடுகள் இருக்கிறதா என்பதை விஞ்ஞானக் கருவிகள் மூலம் கண்டறிந்த பிறகே, இவர் சிகிச்சையை